சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்கள் இணைந்து நாளை (ஆகஸ்ட் 12ஆம் தேதி) இலவச வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணி காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. 


தமிழ்நாட்டில் உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. எனினும் வேலை கிடைத்துச் செல்வோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. இதைக் குறைக்க அரசும் தனியார் துறையும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.




இந்நிலையில் இலவச வேலைவாய்ப்பு முகாம் குறித்து, தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மையத்தின் துணை இயக்குனர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


’’தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், 2வது மற்றும் 4வது வெள்ளிக் கிழமைகளில் வேலை தேடுவோர் மற்றும் வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை (வெள்ளிக் கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.


இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. 


இந்த முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 


முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணி காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் முகாமில் கலந்துகொள்ள எந்த விதக் கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை’’.


இவ்வாறு தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண