பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு படிப்பு முடித்த கையோடு பயிற்சி வழங்கி வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

அந்த வகையில், தாட்கோ மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து இளங்கலை நர்சிங் முடித்த மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இணைய வழி மருத்துவமனை நிர்வாக பயிற்சியானது சென்னை மாவட்டங்களுக்குட்பட்ட மாணாக்கர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Continues below advertisement

பயிற்சி காலத்தில் ரூ.5000

இப்பயிற்சியானது இரண்டு வழி முறைகளில் நடைபெறும். முதல் 2 வாரங்களில் இணைய வழி கற்றல் முறையிலும், அடுத்த 4 வாரங்களுக்கு முன்னணி நிறுவனமான அப்பல்லோ மருத்துவமனைகள் அல்லது மாணாக்கர்களுக்கு வசதியாக அருகாமையிலுள்ள அப்பல்லோ தொடர்புடைய பிற மருத்துவமனைகளில் (Parent Hospital) வேலைவாய்ப்பு பயிற்சியும் (OUT) வழங்கப்படவுள்ளது. பயிற்சி காலங்களில் மாணாக்கர்களுக்கு ரூ.5,000/-ஊக்கத்தொகையும், இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அப்பல்லோ மருத்துவமனைகளிலும் அதனுடன் தொடர்புடைய முன்னணி மருத்துவமனைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இப்பயிற்சியினை பெற 2022, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் முடித்த மாணாக்கர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 25 வயது வரையுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

விண்ணப்பிக்க அழைப்பு

இத்தேர்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும். இத்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் FINE (Finishing Skills for Nursing Excellence) எனப்படும் செவிலியர் பயிற்சியினை பெறுவார்கள். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான செலவினம் தாட்கோவால் ஏற்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.