தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் 30 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.


தமிழகத்தில் உள்ள  நீர் வளங்களை பெருக்குதல், விவசாய உற்பத்தியை பெருக்குதல் மற்றும் சந்தைப்படுத்தல் இணைப்புகளை உருவாக்குதல், அனைவருக்கும் வீடு வழங்குதல், கல்வித் தரத்தை மேம்படுத்துதல்,சுகாதாரக் குறிகாட்டிகளை உயர்த்துதல், சமூக உள்ளடக்கத்தை அடைதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை எளிதாக்குதல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டை வழங்குதல், நிறுவன கடன் வசதி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் சமநிலையை அடைதல், தரவு நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகிய 12 பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் அரசின் மூலம் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2022-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டத்தை (TNCMFP) செயல்படுத்துவதற்கான ஆணைகளை மொத்தமாக ₹5.66 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களைத் தொகுத்து செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதற்கான தகுதி என்ன? தேர்வு செய்யும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.


 





கல்வித்தகுதி:


தொழில்முறை படிப்புகளான பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல் போன்ற படிப்புகளில் முதல்வகுப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கலை அல்லது அறிவியல் படிப்புகளில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


முனைவர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


பணி அனுபவம் கூடுதல் நன்மையாக இருக்கும். பணிபுரியும் அளவிற்கான தமிழ்மொழி அறிவு கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.


வயதுத்தகுதி


இந்த பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 22-30 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் SC/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் மற்றும் BC/MBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அதிகப்பட்ச வயது 33 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


குறிப்பாக இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறையில், கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தும்.


தேர்வு செய்யும் முறை:


முதல்நிலை ( இணைய அடிப்படையிலான தேர்வு), விரிவானத் தேர்வு ( எழுத்துத் தேர்வு) மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.


சம்பளம்


பணியாளர்களுக்கு தலா ரூ.50,000 மாதாந்திர ஊதியம் மற்றும் அவர்களின் தற்செயலான செலவுகளைச் சமாளிக்க தலா ரூ10,000 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். எனவே மொத்தம் ரூபாய் 60 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.


மேற்கொள்ளவிருக்கும் பணிகள்:


தமிழக முதலமைச்சர் அலுவலக பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்ட நிரல்களைப் பற்றிய தரவு உந்துதல் முடிவெடுப்பதைக் கண்காணிப்பது, சிக்கல்களைக் கண்டறிவது போன்ற பணிகளை முதன்மையாக மேற்கொள்வார்கள்.


இதோடு கள நிலைமையை மதிப்பிடுவதற்கும், கருத்துக்களைப் பெறுவதற்கும், தகுந்த பின் தொடர்தல் நடவடிக்கைகளில் உதவுவதற்கும் தேர்வாகும் நபர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கும்.



இதனைச் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற சங்கமாகச் செயல்பட்டு வரும், திருச்சியில் உள்ள பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம், பெல்லோஷிப்களுக்கு கல்வி பங்குதாரராக முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர்பாக BIM நிறுவனத்துடன் விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட உள்ளது. 2021-2022 நிதியாண்டில் ₹41.75 லட்சத்துக்கு நிதி அனுமதி வழங்கவும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.