போரின் மூலம் கற்ற பாடம்:

 

வரலாற்றை சற்று பின்னோக்கி பார்த்தோமேயானால், 1962 ஆண்டு இந்தியா-சீனா போரின் மூலமாக இந்தியா சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டது என்று தான் கூற வேண்டும். 1960 ஆண்டுக்கு முன்னர்  லெப்டினன்ட் ஜெனரல் SPP தோரட், என்ற கிழக்கு ராணுவ தளபதி 1959 ஆம் ஆண்டில் அருணாச்சலத்தின் வடகிழக்கு எல்லைப் பகுதியை பாதுகாக்க தோரட் திட்டம் என்று அழைக்கப்படுத்தி திட்டத்தை தயார்படுத்தி, அன்றைய இந்திய தளபதிக்கு  அக்டோபர் மாதம் 1959 ஆண்டு அனுப்பி வைத்தார். தலைமைத் தளபதி கே.எஸ். திமையா அந்த திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் வி கே கிருஷ்ணனிடம் சமர்ப்பித்து, திட்டத்தின் தேவை குறித்து தெரிவித்தார்.

 

உரிமை கொண்டாடிய சீனா:

 

ஆனால் அன்றிருந்த சூழ்நிலைக்கு இது தேவையில்லாத திட்டம் என்றும், ராஜதந்திர முறைகளிலேயே நாம் சீனாவை சமாளித்து விடலாம் என்றும் அன்றைக்கு இருந்த அரசியல் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை 1962ல் தரைமட்டமானது. அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடிய சீனா 1962 இல் திடீரென படை எடுத்தது.  சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அதாவது பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி, சுருக்கமாக பி எல் ஏ ஆனது மிகப்பெரிய படையெடுப்பை நடத்தி அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று உரிமை கொண்டாடியது. 

 

இதில் இந்தியப் படைகள்  லைன் ஆப் கண்ட்ரோல் என்று சொல்லப்படும் எல்லைப் பகுதிக்கு தங்கள் துருப்புக்களையும், போர் தளவாடங்களையும் வேகமாக கொண்டு சேர்க்காததும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டது.  ஒரு வழியாக  போர் நிறுத்தத்துக்கு பிறகு, தோஜ்பூரில் இருந்து பி எல் ஏ பின்வாங்கியது. பி எல் ஏ வானது போருக்கு ஹெலிகாப்டர் மூலமாகவே படைகளை களமிறக்கியது. சீனாவின் திபெத் பகுதியில் இப்போது இருக்கும் நவீன சாலை வசதி  அப்போது இல்லாத காரணத்தினால் சீன ராணுவம் படிப்படியாக பின்வாங்கியது.

 

இந்தியா முடிவு:

 

இருப்பினும் சீனாவின் திபெத் பகுதியில் இந்திய பகுதியில் இருக்கும் கரடு முரடான மலைப் பிரதேசங்களை போல் இல்லாமல் தட்டையான பகுதியாக இருந்ததுனால், அவர்களால் மிக எளிதாக சாலை வசதிகளையும் ரயில் பாதைகளையும் ஏற்படுத்த முடிந்தது. இதற்குப் பிறகுதான் இந்தியாவின் தோரத் திட்டம் திரும்பவும் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. சீனாவின் தன்னாட்சிப் பிரதேசமான தீபெத்தில் சீனா உட்கட்டமைப்பு வசதிகளை மிக பெரிதாக முன்னேற்றியது. திபெத்தின்  நிர்வாக தலைநகரான லாசாவை பெஜிங், செங்டு, சோங்கிங், குவாங்சூ, ஷாங்காய், ஜினிங் மற்றும் லான்ஜோவுடன் இணைக்கும் 1,956-கிமீ நீளமுள்ள கிங்காய்-திபெத் இரயில்வேயை உருவாக்கினர். சீனாவின் அனைத்து முக்கிய  இராணுவப் பகுதிகளும் இந்த இரயில் வலையமைப்பின் மூலம் லாசாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 2021-ல் ஒரு ரயில் இணைப்பு சமீபத்தில் திறக்கப்பட்டது. 

 

விமானநிலையங்கள், சாலை வசதிகள் மற்றும் ரயில் வசதிகள் என பீப்பிள் லிபரேஷன் ஆர்மியானது இந்திய சீன எல்லைக்குள் வந்து சேர்வதற்கு 24 மணி நேரமே ஆகும் என்றால் இது சீனர்களின் மிகப்பெரிய திட்டமிடல் மற்றும் முன்னோக்கு பார்வையின் கிடைத்த ஒரு வெற்றி என்று சொல்ல வேண்டும். திபெத் மொத்தம் 1,18,800 கிமீ நீளமுள்ள சாலை வலை அமைப்பை சீனாவின் மற்ற பகுதிகளோடு கொண்டிருக்கிறது. இப்படியான வளர்ச்சிக்கு முக்கிய காரணம், 62க்கு பிறகான சீனாவின் பொருளாதார கொள்கை மாற்றம் ஏற்பட்டு அவர்கள் மிகப்பெரிய அளவில் எல்லைகளில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை மன்மோகன் சிங் மற்றும் நரசிம்மராவின் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்படுகின்ற வரையிலும் மிக மெதுவாகவே இந்த பணிகள் நடைபெற்றது.

 

2010 ஆம் ஆண்டு முதல்  லைன் ஆப் கண்ட்ரோல் முழுவதும் பிஎல்ஏவின் அத்துமீறல்களை சீனா தொடர்ந்து வண்ணம் இருந்தது. 4,000-கிமீ எல்ஏசி முழுவதும் பல்வேறு இடங்களில் பிஎல்ஏ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். 2010-க்கும் 2013-க்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட ஊடுருவல்கள் நடந்துள்ளன. நடுவில் சிறிய சிறிய ஊடுருவல்களை செய்தாலும் பெரிய அளவில் மோதல்கள் ஏதும் நிகழா வண்ணம் இருந்தது. இப்படி இருக்கையில் ஏறக்குறைய 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய மற்றும் சீனத் துருப்புக்களுக்கு இடையே ஒரு வன்முறை மோதல், ஜூன் 15, 2020 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் தொடங்கியது. இதன் விளைவாக இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் முந்தைய போரில் புரிந்ததைப் போல  இந்த முறை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சீனாவின் போர் முறைக்கும் படை நகர்விற்கும் ஏற்ப இந்தியாவும் விடாப்பிடியாக போர் முறைகளையும் படை அணியினரை நகர்த்துவதையும் அங்கு அதிகப்படியான படையினை குவிப்பதையும் செய்தது. இது சீனா சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. 

 

இந்தியாவின் வெளியுறவு கொள்கை:

 

ஏனென்றால் இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை சொல்லலாம். இந்தியாவின்  ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, அணிசேரா கொள்கையிலிருந்து இந்தியாவின் வெளியுறவு கொள்கை சற்றே மாறுபட தொடங்கியிருந்தது. மற்றொன்று, எல்லையை ஒட்டிய பகுதிகளில் 4,000 கிலோ மீட்டர் அளவிற்கு சாலை கட்டமைப்பை இந்தியா ஏற்படுத்தி இருந்தது. ஆம்  இமயமலைக்கு இணையாக ஜம்முவில் வடமேற்கில் உள்ள உதம்பூர் முதல் கிழக்கில் அஸ்ஸாமின் டின்சுகியா வரை 4,000 கிமீ தூரம் வரை பரந்த சாலை வலையமைப்பைக் கொண்டுள்ளது. துருப்புக்கள் மற்றும் உபகரணங்களை மலைகளில் இருந்து எல்ஏசி வரை விரைவாக நகர்த்துவதற்கு, இந்தியா சிறந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இன்னமும் கூட எல்லையோர பகுதிகளில் எங்காவது ஒரு இடத்தில் இந்திய ராணுவத்தினர் சாலைகளை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.