தமிழகத்தில் நாளை நான்காம் கட்ட சிறப்பு கொரோனா தடுப்பூசி நடைபெறும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.   


கோவிட்-19க்கான 4வது மாபெரும் தடுப்பூசி முகாம், உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவிடன் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்து. இருப்பினும், தடுப்பூசி போடும் பணி  தொய்வின்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவும், உள்ளாட்சி அமைப்புகளும், சுகாதாரப் பணியாளர்களும் தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாலும், நான்காவது சிறப்பு தடுப்பூசி முகாம்களை நாளைய தினத்தில் நடத்த தமிழ்நாடு அரசு முன்வந்தது.       




முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 3 முகாம்களிலும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வத்துடன் வந்ததாகவும், இதனையடுத்து, 4வது முகாம் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது" என்று கூறினார். 


மேலும், தற்போது கையிருப்பில் 25 லட்ச தடுப்பூசி டோஸ்கள், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் செலுத்தப்படும் என்றும், அக்டோபா் மாதம் 1 கோடியே 23 லட்சத்து 9 ஆயிரத்து 370 தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.   


தமிழகம் முழுவதும் மாபெரும் முதல் கட்ட தடுப்பூசி முகாம் செப்டம்பர் 12ம் தேதியன்றும், இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ம் தேதியன்றும், மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் செப்டம்பர் 26ம் தேதியன்றும் நடைபெற்றது. செப்டம்பர் மாதத்தில், இந்த மூன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் 1 கோடியே 42 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட மாதம் வரை மாநிலத்தில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசியின் எண்ணிக்கை 3.05 கோடியாக உள்ளது. 


மகாராஷ்டிரா, ஆந்திரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட  மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உதாரணமாக, மகாராஷ்டிராவில் 2.4 கோடி பேருக்கு கொரோனா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் இந்த் எண்ணிக்கை 1.1 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு தேவையான அளவு   தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. 


அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கேரள எல்லையில் உள்ள கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொய்வின்றி நடத்தப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.