கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட அழுத்தத்திற்கு அதிகமாக ஆளான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது என்றும், அது இல்லாதவர்களுக்கு ஒப்பீட்டு அளவில் மாதவிடாய் பிரச்சனை குறைவாகவே இருப்பதாகவும் ஒரு அறிக்கை கூறுகின்றது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழத்தின் இதழான Obstetrics & Gynecology ஆப்ஸ்டரிக்ஸ் அண்ட் கைனக்காலஜி என்ற இதழில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. மாதவிடாய் பிரச்சனைகள் பெண்ணை மன ரீதியாக, உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக உபாதைகளுக்கு உள்ளாக்குகிறது.


மன அழுத்ததிற்கும் மாதவிடாய் சுழற்சிக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது என்று கூறுகிறார் இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்களில் முக்கியமானவரான மருத்துவர் மார்டினா அன்டோ ஓக்ராக். மார்ச் 2020 தொடங்கி மே 2021 காலகட்டம் வரை இந்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் பங்கேற்றனர். இவர்களில் யாரும் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளாதவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.


மொத்தம் பங்கேற்ற 354 பெண்களில் 10.5% பேர் அதிக அழுத்தம் இருப்பவர்களாக இருந்தனர். இவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி தொடங்கி, அதன் கால அளவு, பின்னர் ஸ்பாட்டிங் என எல்லாவற்றிலும் சிக்கல் இருப்பது உறுதியானது. கொரோனா காலகட்டத்தில் பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே குடும்பம், குழந்தைகள், வீட்டுவேலை, அலுவலக வேலை என அனைத்தையும் சுமக்க வேண்டியதாக இருந்தது.


மாதவிடாய் நாட்கள் அதிகமாக அதிகமாக அது பெண்களின் பர்ஸையும் பதம் பார்ப்பதாக இருக்கும். அதிக அளவில் பெர்சனல் ஹைஜீன் ப்ராடக்ட்ஸுக்கு பெண்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் இது மாதிரியான மாதவிடாய் பிரச்சனைகள் அதிகமாகியிருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மாதவிடாய் நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும். சீரக தண்ணீர், வெந்தய தண்ணீர் என எது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இது வழிகளை குறைத்து , தசை பிடிப்பு, மனக்குழப்பம் ஆகியவற்றை குறைக்கும். தண்ணீர் தான் முதல் உணவாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் வரும் சோர்வு நீங்கி, சாதாரணமாக வைக்க உதவும்.
 
மாதவிடாய் என்பதே மாதாமாதம் 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் இயற்கை சுழற்சி. ஆனால் சில பெண்களுக்கு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும்போது நாம் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். ஏனெனில் அதற்கான சரியான காரணத்தை அறிந்து சரியான வைத்தியத்தை ஆரம்ப நிலையிலேயே செய்யும்போது தேவையற்ற பெரிய நோய் உபாதைகளைத் தவிர்க்கலாம்.


மாதவிடாய் பற்றி 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு வெளிப்படையாக இந்தியாவில் யாரும் பேசவில்லை. இப்போது மாதவிடாய் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கிறது. வீட்டிற்கு விலக்கு என்று கூறி சிறு பிள்ளைகளைக் கூட வீட்டைவிட்டு மாதவிடாய் நாட்களில் விலக்கி வைக்கும் போக்கு குறைந்துள்ளது. ஆயினும் இன்னும் தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்போது மாதவிடாய் காலத்தில் பேண வேண்டிய ஆரோக்கிய அறிவுரைகள் பெண்களை சென்றடையும்.