ஒவ்வொரு முறை இளம் வயது மாரடைப்பில் பிரபலங்கள் இறக்கும்போதும் மாரடைப்பு பற்றி எச்சரிக்கை செய்திகள் பரவலாக வெளியிடப்படுகின்றன. ஆனாலும் அதை யாரும் அக்கறையோடு கவனிப்பதாக தெரியவில்லை என்ற ஐயம் ஏற்படாமல் இல்லை.


அண்மையில் சித்தார்த் சுக்லா (40), புனீத் ராஜ்குமார் (44), கேகே (53), பிரம்ம ஸ்வரூப் மிஸ்ரா (36) ஆகியோரின் அகால மரணம் ஓரிரு நாட்கள் நம்மை அச்சப்படுத்தியிருக்கலாம். அதன் பின்னர் நாமும் நமது ரொட்டீனுக்கு திரும்பியிருக்கலாம்.
இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் பாஜக பிரமுகரும் டிக்டாக் பிரபலமுமான  சோனாலி போகத் உயிரிழந்தார். 
ஆனால் இவர்களுக்கு நிச்சயமாக சில அறிகுறிகள் தென்பட்டிருக்கும் அதனை அவர்கள் அசட்டை செய்திருக்கலாம். இல்லை என்றால் அது அறிகுறி என்பதையே உணராமல் கூட இருந்திருக்கலாம்.


நாள்பட்ட இதய நோய் மிகவும் ஆபத்தானது. இதனால் இதய வால்வு செயல்பாடு தடைபடும். உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதனை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள். இதயம் செயலிழக்க ஆரம்பித்துவிட்டால் அதனால் ரத்தத்தை சீராக பம்ப் செய்ய இயலாது. அதனால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சென்று சேராது.


சைலன்ட் ஹார்ட் அட்டாக்:


உலகளவில் அதிக மக்களின் இறப்புக்கு காரணமாக இருந்து வருகின்றன இதய நோய்கள். மாரடைப்பு எனப்படும் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆண்களும், பெண்களும் வெவ்வேறு வழிகளில் மாரடைப்பை எதிர்கொள்ளலாம். ஹார்ட் அட்டாக் சில நேரங்களில் வந்த அறிகுறி கூட தெரியாமல் ஏற்படுகிறது. இது சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று குறிப்பிடப்படுகிறது. ஹார்ட் அட்டாக்கிற்கான அறிகுறிகள் மிக குறைவாகவே வெளிப்படும் இருப்பதால் பலருக்கு வாரங்கள் அல்லது மாதங்கள் வரை தங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது பற்றி தெரியாது. உடல் பருமன், புகையிலை பழக்கம், இதய தமனியில் அடைப்பு ஆகியனவற்றால் சைலன்ட் அட்டாக் ஏற்படுகிறது.




கவனிக்கப்பட வேண்டிய அறிகுறி


சோர்வு:


உடல் மிகவும் சோர்வாக உணர்ந்தால். அது அடிக்கடி நிகழ்ந்தால் எச்சரிக்கையாக இருங்கள். இதயம் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை பம்ப் செய்ய முடியாவிட்டால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் சோர்வு ஏற்படும். இதனால் அன்றாட செயல்களைக் கூட செய்யமுடியாத அளவுக்கு சோர்வு ஏற்படும்.


செயல்பாடுகளில் குறைபாடு:


ஒருவேளை அன்றாடப் பணிகளை கஷ்டப்பட்டு மேற்கொண்டாலும் கூட அதனை செய்வதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.


எடீமா அல்லது கனுக்காலில் வீக்கம்: 


உடம்பில் பல்வேறு பகுதிகளில் திரவம் தேங்குவதால் ஏற்படும் வீக்கத்திற்கு மருத்துவத்தில் 'எடீமா' என்று பெயர். சில சமயங்களில் வீக்கம் தன்னால் மறைந்து விடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். எடீமா பொதுவாக கால்கள் அல்லது பாதங்களை பாதிக்கும்.


மூச்சுத் திணறல்:


நுரையீரலில் நீர் கோர்ப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படும். இளைப்பு ஏற்படும்.


குழப்பமான மனநிலை: 


மறதி, குழப்பமான மனநிலையும் கூட இதய நோயின் அறிகுறி தான்.


பசியின்மை:


பசியின்மை, குமட்டல் ஏற்படுகிறது என்றால் அசட்டை செய்யாதீர்கள். அதேபோல் அடிக்கடி அஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் கவனிக்கவும். 


இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள்.