இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை சற்று குறைய தொடங்கியுள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட நபர்கள் சிலருக்கு கருப்பு புஞ்சை நோய் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கருப்பு புஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கருப்பு புஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் அம்போடெரிசின்-பி மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு எழுந்துள்ளது. 


இதுதொடர்பாக கடந்த ஜூன் 1ஆம் தேதி வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், "கருப்பு புஞ்சை பாதிப்பு சிகிச்சை தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒரு அறிவுறுத்தலை தர வேண்டும். மேலும் கருப்பு புஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்ட இளைஞர்களுக்கு சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனென்றால் வயதானவர்கள் ஏற்கெனவே தங்களில் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டனர். தற்போது தேவைப்படும் அளவிலிருந்து 3ல் ஒரு பங்கு அம்போடெரிசின் மருந்துகள் மட்டும் இருப்பதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்க வேண்டும்"எனக் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவுறுத்தலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


இந்நிலையில் தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு கருப்பு புஞ்சை நோய் தொடர்பாக ஒரு மருத்துவ அறிவுறுத்தலை அளித்துள்ளது. இந்த அறிவுறுத்தலில் இருக்கும் விவரம்  தொடர்பாக  ஒரு தனியார் செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் புதிய அறிவிப்பில் அம்போடெரிசின் பி மருந்தை கருப்பு புஞ்சை நோய் ஏற்பட்ட இளைஞர்களுக்கு முதலில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 




அதன்பின்னர் யாருக்கெல்லாம் அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அவர்களுக்கு உடனடியாக அம்போடெரிசின் பி மருந்து கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். ஏனென்றால் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் கருப்பு புஞ்சை நோய் அதிகரித்து நோயாளிகள் உயிரிழக்க நேரிடம் சூழல் உருவாகும். மேலும் கருப்பு புஞ்சை நோயாளிகளுக்கு முயன்றால் அறுவை சிகிச்சை மூலம் அந்தப் புஞ்சை தொற்றை நீக்க முயற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழ்நாட்டிலும்  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கருப்பு புஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் இல்லாததால் உடனடியாக 30 ஆயிரம் அம்போடெரிசின் குப்பிகள் அளவுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் தமிழ் நாட்டில் கருப்பு புஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 கோடி ரூபாய் நிதியையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


கருப்பு புஞ்சை நோய் ஏற்கனவே உள்ள வியாதிதான் என்றாலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களும், சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களும் அதிக அளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. மேலும் சிலர் இந்த நோய் காரணமாக உயிரிழக்கவும் நேரிடுகிறது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ''எங்க ஊரு டாக்டர் அவரு..'' மருத்துவரின் சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் திரட்டிய கிராம மக்கள்!