உலகம் முழுவதையும் புரட்டிப்போட்ட கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கொரோனா. உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்தன. லட்சக்கணக்கான மக்கள் கொத்து, கொத்தாக உயிரிழந்தனர். இதையடுத்து, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை உலக சுகாதார மையம் அமல்படுத்தியது.


உலகை அச்சுறுத்தும் வைரசாக கோவிட் 19-ஐ உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று இனிமேல் உலகை அச்சுறுத்தும் தொற்று அல்ல என்று உலக சுகாதார மையம் இன்று அறிவித்துள்ளது.  


WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ”நாங்கள் மிகுந்த ஆய்வுக்குப் பின்னர் தான் இந்த அறிக்கையை அறிவிக்கிறோம். இன்னும் கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக குறையவில்லை என்றாலும், அதன் தொடக்க காலத்தில் இருந்த அளவிலான பாதிப்புகள் தற்போது இல்லை எனக் கூறலாம். ஆனாலும் எங்களுக்கு கிடைக்கும் தகவலின் படி ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை ஒருவர் கொரோனா தொற்றினால் இறக்கின்றனர். இது எங்களுக்கு வரும் தகவலின் அடிபடையில் கூறுகின்றோம். வைரஸ் இன்னும் நம்மிடையே பரவிக்கொண்டு தான் உள்ளது. மேலும், மனித உயிர்களை பறித்துக்கொண்டு தான் உள்ளது”.


மேலும், “எதிர்காலங்களில் தொற்றுநோய் மீண்டும் பரவினாலும் கட்டுப்படுத்தும் கருவிகள் தங்களிடம் இருப்பதாக WHO அதிகாரிகள் நம்பினாலும், “கடுமையான பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்திய வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து டிரில்லியன் கணக்கான உற்பத்தியை அழித்து, வர்த்தகத்தை சீர்குலைத்தது மட்டுமில்லாமல் மில்லியன் கணக்கான மக்களை அழித்தது.   


அதாவது இறப்பு விகிதம் என்பது, 2021ஆம் ஆண்டில் ஒரு வாரத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்தது தொடங்கி, அது படிப்படியாக குறைந்து 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி வரை வாரத்துக்கு 3500 பேர் இறந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்ததாக எங்களுக்கு அறிக்கைகளை உலகநாடுகள் வழங்கியுள்ளன. ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் இறந்துள்ளனர் எனவும் டெட்ரோஸ் கூறியுள்ளார். 


அதிகப்படியான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. இதனால் தான் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போது நாங்கள் இதனை அச்சுறுத்தும் தொற்று இல்லை என குறிப்பிட்டு விட்டோம் என்றாலும், இதனால் பாதிப்புகள் ஏற்படாது என அர்தப்படுத்திக்கொள்ளக்கூடாது என எச்சரிக்கவும் செய்தார் டெட்ரோஸ். 




மேலும் படிக்க, 


பாகிஸ்தான் அமைச்சர் முன்னிலையில் பயங்கரவாதத்திற்கு எதிராக கொந்தளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்..!