தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.  தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 562 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 1,562, நேற்று 1509 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 



தமிழ்நாட்டைச் சேர்ந்த 1561 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆக மொத்தம் 1562 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 






இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 17 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 44 ஆயிரத்து 489 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 166  நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 166 ஆக உள்ளது. இன்றைய நிலவரப்படி கோயம்பத்தூரில் 215 பேரும், சென்னையில் 166 பேரும், ஈரோட்டில் 132 பேரும்,  தஞ்சாவூரில் 110 பேரும்,  செங்கல்பட்டில் 103 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 


கொரோனாவால் மேலும் 20  பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,961 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 13 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத நான்கு உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 2 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8386 பேர் உயிரிழந்துள்ளனர்.



அதிகபட்சமாக  கோவையில் ஐந்து பேரும் மற்றும் சென்னை தருமபுரி நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,478 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,684 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,66,504 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


  
இன்று மாநிலம் முழுவதும் 43864 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24770 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8687 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 


பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையால்,  தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு கூடுதல் தடைகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. 



அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில்  விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்று, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களை பொது மக்கள் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.