கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதே போல் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது. 


இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள விவரம் பின்வருமாறு:


தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 476ஆக இருந்த நிலையில் இன்று 552ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


 






கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 2,313ஆக உயர்ந்துள்ளது. 169 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


சென்னையில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படோரின் இன்றைய எண்ணிக்கை 253ஆக உள்ளது.


3 மாதங்களுக்குப் பின் தமிழ்நாட்டில் கரோனா பலி


தவிர செங்கல்பட்டு மாவட்டத்தில் 129 பேருக்கும், கோவையில் 32 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும், திருவள்ளூரில் 30 பேருக்கும், கன்னியாகுமரியில் 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


மூன்றாம் அலை ஓய்ந்த பிறகு கரோனாவால் கடந்த சில மாதங்களாக உயிரிழப்புகள் இல்லாமல் இருந்துவந்த நிலையில், நேற்று (ஜூன்.15) தஞ்சாவூரைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு எவ்வித இணை நோயும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கொரோனா பரவல் நான்கு மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் தமிழ்நாட்டில் கரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட பாதிப்பு


 






அதேபோல் இந்திய அளவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 10 ஆயிரத்தைத் தாண்டி 12,213ஆகப் பதிவாகியுள்ளது.


இந்திய அளவில் நேற்று 11 பேர் உயிரிழந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 4,024 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 58,215ஆக உள்ளது.