இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,111 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.


குறையும் பாதிப்பு:


நேற்று இந்தியாவில் 10 ஆயிரத்து 093 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 60,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி அதிகபட்சமாக 11,109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவான தொற்று நிலவரம் ஆகும். இந்தியாவில் மொத்தமாக 60 ஆயிரத்து 313 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு  4,42,35,772 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,141 ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.69 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 57,542 லிருந்து 60,313 ஆக உயர்ந்துள்ளது.


முதலிடத்தில் கேரளா:


இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 19,848 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 5916, தலைநகர் டெல்லியில் 5297, உத்திர பிரதேசத்தில் – 3414, தமிழ்நாடு – 3195, ஹரியானா – 4142 பேர், குஜராத் – 2309 பேர், ஹிமாச்சல் பிரதேசம் – 1869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 50,313 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1,08,436 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் குஜராத்தில் 6 பேர், டெல்லியில் 3 பேர், மகாராஷ்டிராவில் 2 பேர், ராஜஸ்தானில் 3 பேர், உத்திர பிரதேசத்தில் 4 பேர், தமிழ்நாட்டில் ஒருவர் என மொத்தம் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார மையம் தரப்பில்  கடந்த மாதம் தடுப்பூசி போடும் விதிமுறைகளை திருத்து கடந்த வாரம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,


முதல் பிரிவினர் ( high priority group):  வயதானவர்கள், இணைநோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய பின் 6-12 மாதத்திற்குள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இரண்டாம் பிரிவினர் (medium priority group): இணை நோய் இல்லாத இளம் வயதினர், குழந்தைகள், இணை நோய் இருக்கும் 18 வயது மேல் இருப்பவர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் என்றும் இந்த பிரிவினருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.


மூன்றாம் பிரிவினர் ( low priority group): 6 வயது முதல் 17 வயது வரை இருப்பவர்கள் மூன்றாம் பிரிவினராக கருதப்படுகின்றனர். இந்த பிரிவினருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை என்றும் தேவைப்பட்டால் செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி என்பது அனைத்து வயதினருக்கும் உகந்தது என உலக சுகாதார அமைப்பு தரப்பில் கூறப்படுகிறது.