நாடு முழுவதும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 45,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டத்தில் 48 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழ்நாட்டில் 9 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 7 பேருக்கும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.






 


கடந்தாண்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த கொரோனா வைரசின் இரண்டாவது அலையில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் காணப்படும் இந்த உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.


தற்போது, இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்த நிலையில், புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள டெல்டா பிளஸ் வகை கொரோனா, மூன்றாவது அலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும், மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் இரு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு கூறியது. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டது.


சிறிய பாதிப்பு போல தோன்றும் இந்தப் பிரச்னை பெரிதாக விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பெரும் கூட்டங்கள், பார்ட்டிகள் போன்றவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.




முன்னதாக, இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வைரஸ் குறித்து தற்போதே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது.


இந்தியாவிலே முதன்முதலாக டெல்டா பிளஸ் கொரோனா தொற்று மத்திய பிரதேசத்தில்தான் கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தின் தலைநகரான போபாலில் 65 வயதான மூதாட்டிக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி தான் அவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மூதாட்டி கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோசையும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் மரணம் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜெயினில் பதிவானது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணி சிகிச்சை பலனின்றி கடந்த 23ஆம் தேதி உயிரிழ்ந்துவிட்டதாக மத்திய பிரதேச அரசு தெரிவித்தது.