இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,380 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.


இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி தொற்று  3000க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 2,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று புதிதாக 2,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது குறைவாகும். இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 27,000 ஆக குறைந்துள்ளது.


இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,44,10,738 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,547ல் இருந்து 5,31,680 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  கடந்த வாரம் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 47,246 ஆக இருந்தது இன்று 30,000 க்கும் கீழ் குறைந்துள்ளது. 27,212 பேர் மொத்தமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 6816 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 1876 பேர், தலைநகர் டெல்லியில் 1097 பேர், உத்தர பிரதேசத்தில் – 1482 பேர், தமிழ்நாடு – 1426 பேர், ஹரியானாவில் – 1540 பேர், குஜராத்தில் – 572 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 27,212 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1,38,993 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா தொற்று 65,000 கடந்த நிலையில் தற்போது அது படிப்படியாக குறைந்து வருகிறது.    


கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 3 பேர், பஞ்சாபில் 3 பேர், ராஜஸ்தானில் 2 பேர், மகாராஷ்டிராவில் 2 பேர், உத்திர பிரதேசம், ஒடிசா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 21 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவது போல, தமிழ்நாடிலும் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 97 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 320 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 1,426 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.