பிசிஓடி, பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் இதனை பிசிஓஎஸ் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்றும் அழைக்கின்றன. சராசரியாக 12 வயது முதல் 45 வயதிலான பெண்களில் 27% பேருக்கு இந்த உபாதை இருக்கிறது.


பெண்ணின் ஹார்மோன் அளவு மாறுபடும் போது இந்த உபாதை ஏற்படுகிறது. பிசிஓடி பிரச்சினை இருக்கும் பெண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆண்ட்ரோஜன் அதிகமாக சுரக்கிறது. இதனால் அவர்களின் ஓவரிக்கள் கருமுட்டை உருவாக்குவதில் சிரமப்படுகிறது. இந்த மாதிரியாக ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் வருகிறது. இதனால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்பு உருவாகிறது.


பிசிஓடி அறிகுறிகள் இவைதான்:


1. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி: கருமுட்டை உருவாவதில் சிக்கல் ஏற்படுவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. ஒரு சில பெண்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை 20 நாட்களுக்கு ஒருமுறை கூட மாதவிடாய் ஏற்படுகிறது.
2. அதீத உதிரப்போக்கு: கர்ப்பப்பையில் நீண்ட காலமாக கருமுட்டைகள் கட்டி நிற்பதால், அதீத உதிரப்போக்கு ஏற்படுகிறது.
3. முடி வளர்தல்: 70% பெண்களுக்கு பிசிஓடி பாதிப்பு ஏற்படும்போது முகம், உடலின் மற்ற பாகங்களில், நெஞ்சு, தொப்பை ஆகிய பகுதிகளில் முடி வளர்கிறது. தலைமுடி உதிர்ந்துபோகிறது.
4. சருமம் கருத்துப் போதல்: கழுத்து, இடுப்புப் பகுதி, மார்பகங்களுக்குக் கீழ் கருத்துப் போய்விடும்.
5. தலைவலி: ஹார்மோன் மாற்றங்களால், சில பெண்களுக்கு தலைவலி ஏற்படும்.
6. கரும்புள்ளிகள்: அதிகப்படியாக சுரக்கும் ஆண் ஹார்மோன்களால் முகம், நெஞ்சு, முதுகுப் பகுதியில் கரும்புள்ளிகள் ஏற்படலாம்.
7. உடல் எடை அதிகரித்தல்: பிசிஓடி கொண்ட 80% பேருக்க்கு உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிக்கும் போது சர்க்கரை நோய், இதய நோய்கள், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் ஆகியன ஏற்படும்.
8. மனஅழுத்தம்: இத்துடன் பிசிஓடி பிரச்சனையால் மன அழுத்தமும் ஏற்படுகிறது.
இப்படியான சிக்கலுக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வரும், சகுந்தலா தேவி சில டிப்ஸ்களை வழங்குகிறார்.


மாதவிடாய் சுழற்சி சீராக சில டிப்ஸ்:


100 கிராம் தனியா, 100 கிராம் நெல்லி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து அரை டம்பளர் தண்ணீரில் கலந்து கொள்ளவும். அதனை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அதனை வடிகட்டிக் குடிக்கவும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றிலும், இரவு உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவும் குடித்து வரவும். 
இத்துடன் காஞ்ச்னார் குகுல், ஆரோக்யவர்தினி வாதி ஆகிய மாத்திரைகளை தினமும் காலை மற்றும் மாலை எடுத்துக் கொள்ளலாம்.


மாதவிடாய் தள்ளிப்போகும் சிக்கலைத் தீர்க்க:


100 கிராம் அஜ்வைன் (கார்மோன்), 100 கிராம் கேரட் சீட்ஸ் எடுத்துக் கொண்டு. அதனை லேசான சூட்டில் வைத்து கொதிக்கவிடவும். அது ஒரு கப் அளவு குறைந்தவுடன் அதை அரை டப்ளர் தண்ணீர் ஒரு சின்ன தேக்கரண்டி அளவுக்கு சேர்த்து பருகி வரவும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றிலும், இரவு உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவும் குடித்து வரவும்.  இத்துடன் காஞ்ச்னார் குகுல், விர்திவாதிகா பத்தி மாத்திரைகளை சாப்பிடவும். 


வெள்ளி பயன்படுத்தவும்:


பிசிஓடி பிரச்சனை உள்ள பெண்கள் வெள்ளி டம்ப்ளரில் தண்ணீர் அருந்தலாம், வெள்ளி நகை அணிந்து கொள்ளலாம். வெள்ளி உடலுக்குக் குளிர்ச்சி தரும். மூட் ஸ்விங்கில் இருந்து பாதுகாக்கும். நீங்கள் ஆயுர்வேத மருந்துகள் உட்கொண்டால் உணவில் சர்க்கரை, உப்பு, புளிப்பு ஆகியனவற்றை குறைத்துக் கொள்ளவும்.