Fact Check: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக பரவும் தகவலின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


இணையத்தில் வைரலாகும் தகவல்:


இரா கோகுல் என்பவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார். 75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹10000/_ ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹25000/_ரூபாயும் ஊக்கத்தொகையாக அழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவும். இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே. உயர் நீதிமன்ற உத்தரவு எண்: WP (MD) NO.20559/2015" என குறிப்பிட்டு பிரதமர் மோடியின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.




                                 இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


தகவலின் உண்மைத்தன்மை என்ன?


இணையத்தில் பரவும் தகவல் உண்மை தானா என்பதை கண்டறிய, மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இவ்வாறான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா என்று ஆராய்ந்தோம். அப்போது, அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, எந்த ஒரு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படவில்லை என்பது உறுதியானது.


அதோடு, "10ம் வகுப்பில் 75% மற்றும் 12ஆம் வகுப்பில் 85% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 10,000 மற்றும் ரூ. 25,000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் என்ற தகவலை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திருச்சி மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக The Hindu ஊடகம் கடந்த மே 16ஆம் செய்தி வெளியிட்டுள்ளது.






இதனை உறுதிப்படுத்தும் விதமாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இது தொடர்பாக PIB Fact Check டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், "முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் 10 அல்லது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. எனவே, இவ்வாறாக வைரலாகும் செய்தி தவறானது" என்று கூறப்பட்டுள்ளது.


தீர்ப்பு:


தேடலின் முடிவாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக வைரலாகும் தகவல் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Newsmeter என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே  திருத்தி எழுததியுள்ளது.