தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம்  புகழ்பெற்ற பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் உயிரிழந்தார். அவருக்கு வயது 69


ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சரிகமபா' மூலம் 2017ஆம் ஆண்டு பெரும் புகழ் வெளிச்சத்து வந்தவர் பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள்.


கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் படத்திலேயே பாடகியாக ரமணியம்மாள் அறிமுகமாகி ஒரு சில படங்களில் பாடியுள்ளார். நாட்டுப்புற பாடகியான இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடித்த காதல் படத்தில் தண்டட்டி கருப்பாயி பாடலைப் பாடிய நிலையில், அந்த பாடல் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து சில படங்களில் பாடியுள்ளார். 


எனினும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நிகழ்ச்சி நடுவர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் அசத்தி ’ராக்ஸ்டார்’ எனும் அடைமொழியைப் பெற்று அவ்வாறே அதுமுதல் அழைக்கப்பட்டு வருகிறார்.


நடிகரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் பாடல்களைப் பாடி சரிகமபா நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களைக் கவர்ந்த ரமணியம்மாள், அதனைத் தொடர்ந்து புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அந்த நிகழ்ச்சி கொடுத்த பெயர் மற்றும் புகழால் சினிமாவில் மீண்டும் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தது.


சூர்யா நடித்த காப்பான் படத்தில் இவர் பாடிய பாடல் வெற்றி பெற்றது.  தொடர்ந்து ஜூங்கா, சண்டைக்கோழி 2 உள்ளிட்ட படங்களிலும் பாடியுள்ளார். இறுதியாக யோகி பாபு நடித்த பொம்மை நாயகி படத்திலும் ராக் ஸ்டார் ரமணியம்மாளின் பாடல் இடம்பெற்றிருந்தது.


தன் 63 வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற ராக்ஸ்டார் ரமணியம்மாள், சாதனைகளுக்கு வயது ஒரு பொருட்டல்ல என உணர்த்தி பலருக்கும் உத்வேகமாகத் திகழ்ந்தார்.


சிறுவயதில் இசை கற்கத் தொடங்கி பின் குடும்ப சூழல் காரணமாக வீட்டு வேலைகள் செய்து வந்த ராக்ஸ்டார் ரமணியம்மாள், திருமண நிகழ்ச்சிகளிலும் பாடி வந்துள்ளார்.


எம்ஜிஆரின் தத்துவப் பாடல்களை பாடித்தான் தனது இசை திறமையை வளர்த்துக்கொண்டதாக ரமணியம்மாள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த நிலையில் சில மாதங்களாக உடல்நலக் குறைவுவால் இருந்த ரமணியம்மாள் இன்று காலை உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை அவரது வீட்டில் நடைபெற உள்ளன. 


ரமணியம்மாள் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அவரது இசை ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரமணியம்மாளுக்கு 8 பிள்ளைகள் அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. தற்போது தனது மகன் மற்றும் பேரக் குழந்தைகள் உடன் வசித்து வந்தார்.


மேலும் படிக்க: Kajal Agarwal : மதிப்பு, ஒழுக்கம் குறைவாக இருக்கும் இடம் எனக்கு தேவையில்லை... தென்னிந்திய சினிமா பற்றி காஜல் அகர்வால் சொன்ன கருத்து !