ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான சத்யா தொடரின் நாயகி ஆயிஷாவுக்கும், அதன் இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் சின்னத்திரையோரம் இப்போதைய ஹாட் டாப்பிக். சீரியல்கள் ஒளிபரப்பில் விஜய் டிவிக்கும் ஜி தமிழுக்கும் இடையே ஒரு பெரிய போட்டி உண்டு. இந்த இரண்டு சேனல்களும் சேர்ந்து சன் டிவி சீரியலை கொஞ்சம் ஓரங்கட்டித்தான் வைத்திருக்கின்றன.


இளசுகள் மத்தியில் ஜீ தமிழ், விஜய் சீரியல்கள் தான் பிரபலம். ஜீ தமிழ் சீரியல்கள் எவ்வளவு ஃபேமஸோ அதே அளவுக்கு அதன் சீரியல்களில் நடக்கும் லடாய்களும் ஃபேமஸ். அதேபோல், ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரில் அவ்வப்போது ஆர்டிஸ்ட் மாற்றங்களும் நடைபெறும். திடீரென்று ஒரு ஸ்லைட் போடுவார்கள்.. இனி இந்த கதாபாத்திரத்தில் இவருக்குப் பதிலாக இவர் என்று அறிவித்துவிட்டு சீரியலை ஓட்டுவார்கள்.


இப்படி ஜீ தமிழ் சீரியல்களும், சீரியல்களைச் சுற்றிய கதைகளும் ஏராளம். சரி இப்ப நம்ம சத்யா சீரியல் விவகாரத்துக்கு வருவோம். 


கேரளாவைச் சேர்ந்த நடிகை ஆயிஷா. இவர் முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலின் வாயிலாக சின்னத்திரையில் அறிமுகமானார். ஆனால் இந்த சீரியலில் நடிக்கும்போதே இயக்குநருடன் மோதல் ஏற்பட்டதால், அதில் இருந்து நீக்கப்பட்டார்.


தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலின் மூலம் புகழ் பெற்றுள்ள இவர், இந்த சீரியல் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.


இந்த சீரியல் புரோமோவில் டாம் பாயாக தான் அறிமுகமாகியிருப்பார். அறிமுகமே அதகளமாக இருந்ததால் இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. சும்மா சொல்லக் கூடாது, நடிப்பில் ஆயிஷா பிண்ணிப் பெடலெடுக்கிறார். அவரது திறமைக்கு சத்யா சீரியல் ஜாக்பாட் வாய்ப்பு. இப்படி சத்யா சீரியலில் சக்சஸ் கொண்டிருந்தவர் திடீரென இயக்குநருடன் சண்டை கட்டிவிட்டாராம். அட இந்த ஆயிஷாவுக்கு வேறு வேலையே இல்லப்பா.. எப்பப் பாரு யார் கிட்டயாவது சண்டை பிடிக்கும் என நெருங்கிய வட்டாரம் கூறுகின்றது.


சரி நடந்தது என்னவென்று விசாரித்தால், இந்தப் பொண்ணுக்கும் இயக்குநருக்கும் ஏதோ மனவருத்தமாம். இயக்குநர் இந்தப் பொண்ணு இனி வேண்டவே வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றுள்ளாராம். அப்புறம் இறங்கி வந்த ஆயிஷா ஒருவழியா இயக்குநரை சமாதானப்படுத்தி மீண்டும் சீரியல் வாய்ப்பைக் கைப்பற்றியுள்ளாராம்.


ஆரம்ப காலத்தில் நடிப்பு வரலை, ஒல்லியா இருக்க என பல கேலி கிண்டல்களை சந்தித்த ஆயிஷா சற்றும் மனம் தளராத தொடர் முயற்சிகளால் இந்த நிலையை எட்டியுள்ளார். இது உண்மையிலேயே அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்பதால் சத்யாவுக்கு சபாஷ் சொன்னால் தகும்.