எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் வடக்கன் படத்தின் டைட்டிலானது கடுமையான சென்சார் போர்டு எதிர்ப்பால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட  பல படங்களுக்கு வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி. இவர் அழகர்சாமியின் குதிரை படத்திற்கு கதை எழுதியிருந்தார். இதனிடையே எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.


டிஸ்கவரி சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தில் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நாடகாவைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  


இந்த படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. வடக்கன் என டைட்டில் கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், வசனங்களும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. டீசரில் இடம் பெற்ற காட்சிகள் தமிழ்நாட்டை சேர்ந்த ஹீரோ வடமாநில தொழிலாளிகளிடம் அடி வாங்கி வந்தது போலவும், இதுபோன்ற தொழிலாளர்களால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இடம் பெற்றிருந்தது. 






மேலும், “எங்க பார்த்தாலும் வடக்கன்கள் வேலைக்கு வந்துடுறாங்க.. ஒருத்தன் கூட நம்மூர்ல இருக்கக்கூடாது...எல்லா வடக்கன்களையும் அடிச்சி பத்தணும்.. வெளியூர்ல இருந்து பிழைக்க வந்தவன் இங்குள்ள வடையை சாப்பிட மாட்டானா, அவனுக்காக பானிபூரி, பேல்பூரின்னு போட்டுட்டு இருப்பியா” என வசனங்களும் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது.


ஏற்கனவே தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம்  இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சில இடங்களில் வடமாநில மக்கள் மீது ஒருவித வெறுப்புணர்வும் நிலவுகிறது. 


ஆனால் வடமாநில மக்களை பொறுத்தவரை இந்தியாவில் தமிழ்நாட்டை தான் சிறந்த பாதுகாப்பான இடமாக கருதுகிறார்கள். அப்படி இருக்கையில் வடக்கன் என்ற பெயரில் இப்படியொரு படம் வருவதை பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஆனால் சென்சார் போர்டில் படத்தின் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.இதனால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இப்படியான நிலையில் வடக்கன் படத்தின் பெயர் மாற்றப்பட்டு புதிய பெயர் “ரயில்” என சூட்டப்பட்டுள்ளது.