தமிழ் சினிமாவில் தான் நினைக்கும் காட்சிகளை வசனம் மூலம் விவரிப்பதை விட இசை மொழியை அதிகம் விரும்புபவர் இயக்குநர் மணிரத்தினம். அதே போல காட்சிகளாகட்டும் , பாடல்களாகட்டும் எதுவாக இருந்தாலும் தனது இசை மூலம் உயிரூட்டும் வித்தை தெரிந்தவர் இசைஞானி இளையராஜா. இந்த இரண்டு ஜாம்பவான்களும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும். நிச்சயம் அது மிகச்சிறந்த கலைப்படைப்பாகத்தானே இருக்கும் . 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக அனுப்பல்லவி என்னும் கன்னட திரைப்படத்திற்காக இணைந்த இந்த கூட்டணி இசை பேசும் வெற்றி படங்களை கொடுத்துள்ளது. தமிழில் முதன் முறையாக முரளி மற்றும் ரேவதி காம்போவில் வெளியான ‘பகல்-நிலவு’ திரைப்படத்தில் பணியாற்றினார்கள் மணிரத்தினமும் இளையராஜாவும். சொல்லவா வேண்டும் . படம் சூப்பர் டூப்பர் ஹிட் . குறிப்பாக பூ மாலையே தோள் சேர வா என்னும் பாடல் இன்றளவும் ஏதோ ஒரு இசைப்பிரியனை வியக்க வைத்துக்கொண்டுதானே இருக்கிறது.


அந்த அளவுக்கு மணிரத்தினத்தின் எண்ண ஓட்டத்தை கச்சிதமாக இசையாக்கியவர் இளையராஜா. பாடல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பின்னணி இசையை பற்றியும் பேச வேண்டும், குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மௌனராகம் , நாயகன் , தளபதி உள்ளிட்ட படங்களை சொல்லலாம். மௌனராகம் திரைப்படத்தில் கார்த்திக்- ரேவதி காம்போவில் ஒரு மாதிரியான இசையையும் , மோகன் - ரேவதி காம்போ வரும் பொழுது வேறு மாதிரியான வித்தியாசங்களை காட்டியிருப்பார் இளையராஜா .


அதே போல நாயகன் படத்தின் பின்னணி இசை இன்றளவும் பல மீம்ஸ்களை நிறைத்து வருகிறது. மணிரத்தினம் மற்றும் இளையராஜா காம்போவில் இறுதியாக வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் தளபதி . அந்த திரைப்படத்திற்கு பிறகு சில  இந்த ஜோடி பிரிந்துவிட்டது. அதற்கான வெளிப்படையான காரணம் இன்றளவும் தெரியவில்லை.



இந்நிலையில் இவர்கள் பிரிந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து நடிகரும் , உதவி இயக்குநருமான மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.  அதில் “இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாகியிருக்கலாம். அது  ஒரு இருட்டு அறைக்குள்ளாகவே முடிந்திருக்கலாம். மேலும் மணிரத்தினம் தனது அடுத்த படமான ரோஜா திரைப்படத்திற்கு உலகத்தரத்தில் ஒரு இசை வேண்டும் என விரும்பியிருக்கலாம் என்றார். மேலும் இருவருமே மிகப்பெரிய ஜாம்பவான்கள் அந்த பிரச்சனை குறித்து இதுவரையில் வெளியில் பேசியதே இல்லை என்றும் கூறியுள்ளார்.


ரோஜா திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தால் வேறு மாதிரியான இசை கிடைத்திருக்குமே தவிர , வெள்ளை மழை போன்ற பாடல்கள் நமக்கு கிடைத்திருக்காதல்லவா என கூறியுள்ளார் மாரிமுத்து. தளபதி படம் எடுக்கப்பட்ட காலகட்டங்களில் மாரிமுத்து அரண்மனை கிளி திரைப்படத்தில் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக வேலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.