கூட்டம் கூடிதான் சினிமாவை பார்க்க, உருவாக்க முடியும். இந்த லாக்டவுன் காரணமாக இதெல்லாம் பண்ண முடியல. இதனால பெரிய சோர்வு வந்திருக்கு. நினைச்ச வேலையை நினைச்ச மாதிரி பண்ண முடியலயேனு வருத்தமா இருக்கு. '' என்று தொடங்கிறார் கவிஞரும் அரசியல்வாதியமான சினேகன். 



நடந்து முடிஞ்ச சட்டமன்ற தேர்தல் கொரோனா பரவலுக்கு காரணம்னு சொல்றதை எப்படி பார்க்குறீங்க?


நடந்து முடிஞ்ச தேர்தலை கொஞ்சம் தள்ளி வெச்சிருக்கலாம். ஏன்னா, மக்களுக்காக தான் அரசாங்கம்.  இந்த மக்களை கஷ்டப்படுத்தி என்ன பண்ண போறீங்கனு கேள்வி எப்போவும் எனக்குள்ள இருந்துக்கிட்டு இருக்கு. விரைவாக கொரோனாவை கட்டுபடுத்துவோம்னு அரசாங்கம் சொல்றாங்க. இதை வரவேற்கிறோம். 



ஆட்சி மாற்றம் எப்படியிருக்கு?


ஸ்டாலின் அண்ணன் ஆட்சிக்கு வந்தது வரவேற்கத்தக்கது. ஏன்னா, தன்னுடைய இளம் பருவத்துல இருந்து தந்தையுடன் பயணம் பெற்றவர். பல்வேறு சந்தர்ப்பங்களில் முதல்வராக வாய்ப்பு இருந்து தள்ளி போயிருச்சு. வேறு எங்கும் திசை திரும்பமா தன்னுடைய முழு வாழ்க்கையும் அரசியல்ல செலுத்தியவர். மிகப் பெரிய பயம் இவருக்கு இருக்கு. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ரெண்டு பேருமே தவறு செய்ய மாட்டாங்க. ஏன்னா, ரெண்டு பேரும் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்காங்க. ஆனா, இவங்களுக்கு கீழே இருக்குறவங்க தவறு செய்யாம இருப்பாங்களானு தெரியாது. இவரின் ஆட்சி இப்படியே தொடர்ந்தால் குறை சொல்ல முடியாது. ஆனா, இப்போவே இவர்களுக்கு கீழே இருக்குறவங்க குற்றம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. நிறைய இடங்கள்ல அத்து மீறல்கள் பண்ணிட்டுதான் இருக்காங்க. 


கோவைல கமல் தோற்றது எப்படியிருந்தது?


அரசியல் இப்படிதான் இருக்கும்னு தெரியும். எங்க தலைவர் கமலுக்கும் தெரியும். ஆச்சரியம் ஏற்படுத்தல. ஆனா, நற்பணி தொண்டர்கள் சோர்வு அடைஞ்சிருக்காங்க. ஏன்னா, தலைவர் வந்துட்டா மூணு மணி நேரத்துல எல்லா முடிஞ்சிரும்னு சினிமா மாதிரி நினைச்சிட்டாங்க. தலைவர், திரையில மட்டும் இல்ல தரையில போராட முடியும்னு என்னை மாதிரி ஆட்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா, தொண்டர்கள் தலைவர் கேள்வி கேட்குற இடத்துல உட்காருவார். மாற்றம் வரும்னு நம்பிட்டு இருந்தாங்க. இவங்களுக்கு பெரும் ஏமாற்றம்தான். இதை சரி செய்ய தலைவர் எல்லார் கூடவும் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கார். கடந்து வரணும்னு சொல்லியிருக்கார். அரசியல் உண்மை நிலவரத்தை தொண்டர்கள் புரிஞ்சிக்கிட்டாங்க. அரசியல் களமாட தயாராகிட்டாங்க. இப்போ பெருசா இருக்குற எல்லா கட்சியும் ஒரு நேரத்துல எதுவும் இல்லாம இருந்திருக்காங்க. வெற்றி, தோல்வி இங்கே சகஜம்தான். இங்கே யாரையும் தனிப்பட்ட முறையில குறை சொல்ல முடியாது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான வேலையை இப்போவே செய்ய ஆரம்பிச்சிட்டோம். முக்கியமா, அன்னைக்கு தமிழ்நாட்டுல இருந்த எல்லாருமே கண்கலங்கி கண்ணீர் விட்டாங்க. நிறைய எம்.எல்.ஏக்கள் வருந்தி பேசுனாங்க. 'உங்களுக்கு அரசியல் தெரியல, அந்த நேரத்துல யார்கிட்ட என்ன பேசணும்னு தெரியல. டக்குனு மேல் இடத்துக்கு போன் அடிச்சிருக்கலாம்னு' சிலர் சொன்னாங்க. இதெல்லாம் எங்களுக்கே தெரியாது. மக்கள் ஓட்டு போடுறாங்க. இதுக்கு மேல என்ன செய்யணு தோணல. 



முக்கியமான சிலர் கட்சியில இருந்து போனது பற்றி?


கமல் சார்னாலதான் இவங்க எல்லாருமே முக்கியமானவர்கள். மாற்றத்தை நோக்கி நாங்க ஓட ரெடியாயிருந்தப்போ வந்தவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான் செஞ்ச தவறு. யூ ட்யூப்ல விழிப்புணர்வு வீடியோ போட்டதுனாலயே பெண்மைக்கு மீறிய தகுதியை கொடுத்திருக்கோம். இப்படியிருக்கும் பட்சத்தில் தனிபட்ட துறையில இவங்க முக்கியமானவங்களை தவிர கட்சியில இல்ல. இவங்க எல்லாரும் கட்சியில முக்கியமானவங்களும் தெரிய வைத்ததே நம்மவர்தான். நாங்க கட்சி தொடங்கிய போது இன்னைக்கு கட்சி இருந்த யாருமே இல்ல. பணம், பதவி, அந்தஸ்து, கைதட்டல், லாபம்னு எதை வேணுனாலும் எதிர்பார்த்து வந்தவங்களுக்கு நினைச்சது நடக்காத போது பயம் வந்திருது. இதை கடந்து போக பயந்தவங்க எங்களை கடந்து போயிட்டாங்க. அவ்வளவுதான். 


வெளியே போனா யார்கூடாவது தொடர்புல இருக்கீங்களா?


பெருசா யார்கிட்டயும் பேசல. இவங்களுக்கு பிரச்னை இருந்திருந்தா சண்டை போட்டிருக்கலாம். ஆனா, இது வீதில போடமா கட்சி அலுவலகத்துல போட்டிருக்கணும். பொதுகுழு, செயற்குழு, சம்பந்தப்பட்டவங்கனு யாருமே மதிக்கமா போனாகூட உங்களை நம்பி தொண்டர்கள் இருந்திருக்காங்க. எனக்கு இருக்குற வருத்தமே, 'எதற்காக அவசரப்பட்டு வெளியே போனாங்க, இதை சண்டை போட்டு சரி பண்ணியிருக்கலாம்ங்குறதுதான். வெளியே போனவங்களை சார்ந்தவங்க தவறுகள் பண்ணிட்டு இருக்காங்க. திமுகவுக்கு வாங்க பதவி வாங்கி தரோம்னு சொல்லிட்டு இருக்காங்க. பிசினஸ் பண்ணி தரோம்லாம் சொல்றாங்க. இதெல்லாம் வேடிக்கையா இருக்கு. திமுகவில் பதவி வாங்கி தருவதற்கு இவங்க யார்னு தெரியல. 50 ஆண்டுகள் திமுகவுல இருக்குறவங்களுக்கே இங்கே நல்ல பதவி கிடைக்கல. வியாபாரிகள் மாதிரி நடந்துக்கிட்டு இருக்காங்க. கமல் மாதிரியான ஆட்கள்தான் விழுந்தாலும் ஒரே தொழிலில் மூலதனம் பண்ணுவாங்க. எல்லாருமே எங்களின் நம்மவர் போல் இருப்பாங்கனு நம்புறது எங்க மூலதனம். இவர்கள் எங்கே போனாலும் வியாபாரம் நோக்கத்துடன் தான் இருப்பாங்க.