நான் கலையுலகில் கேரியரை வளர்த்துக் கொண்ட பின்பு தான் திருமணம் செய்து கொள்வேன் என நடிகை விஜே அர்ச்சனா தெரிவித்துள்ளார். 


சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் நடித்து ரசிகர்களிடத்தில் விஜே அர்ச்சனா நன்கு பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தேன்மொழி பி.ஏ., இந்திரா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் வைல்ட் கார்டு வழியாக பங்கேற்று டைட்டில் பட்டம் வென்றார். இவர் தற்போது பாரதி கண்ணம்மாவில் நடித்த நடிகர் அருண் பிரசாத் உடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இருவரும் காதலிப்பதாக வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 


இப்படியான நிலையில் தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் பற்றி அர்ச்சனா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “நான் காலேஜ் படிக்கும் போது எனக்கு ஒரு தோழி இருந்தார். எதிர்பாராதவிதமாக அவள் என்னிடம் இருந்து பிரியும் சூழல் வந்தது. அது பிரேக் அப் ஆனது மாதிரி இருந்தது. என்கிட்ட சொல்லவே இல்லை. ஏன் போனாங்கன்னு தெரியல. நம்பர் மாத்திட்டாங்க. மற்ற நண்பர்கள் மூலமாக அந்த குறிப்பிட்ட தோழி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது புரிந்தது. நான் அந்த விஷயத்தில் ரொம்ப வருத்தப்பட்டிருந்தேன். ஒருநாள் சந்திக்கும் போது அந்த தோழி அந்த சமயத்தில் என்ன நடந்தது என விளக்கமளித்தார். அதன்பிறகு நான் பெரிதாக அந்த தோழியிடம் பேசிக்கொள்ளவில்லை” என கூறினார். 


அதேசமயம் சமூக வலைத்தளங்களில் சொல்லப்படுவது போல நானும், அருணும் காதலிக்கவில்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இதைப் பற்றி நாங்கள் பேசிக்கொள்ள மாட்டோம். சமூக வலைத்தளங்களில் சில விஷயங்கள் நம்புற மாதிரியும், கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. மேலும் நான் ரொம்ப அதிகமாக உணர்ச்சிவசப்படுவேன். அதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கான பவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் எனவும் அர்ச்சனா பேசியுள்ளார். 


தொடர்ந்து திருமணம் பற்றி பேசிய அவர், “நான் இப்போதைக்கு என்னோட கேரியரை வளர்த்து கொள்ள வேண்டும் என்று தான் விரும்புகிறேன். அதன்பிறகு திருமணம் செய்து கொள்வேன். அது வாழ்க்கையின் ஒரு பகுதி என நினைக்கிறேன். லவ் அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எதுவாக இருந்தாலும் சரி என்னை கையாள தெரிந்தால் போதும்” என தெரிவித்துள்ளார்.