தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிற மொழி பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


பவன் கல்யாண்


நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் திரு.விஜயகாந்த்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது.


குடும்பக் கதைகளுடன், சமூகக் அக்கறை கொண்ட ஆக்ஷன் படங்களிலும் நடித்துள்ளார். 2005-ல் திரு. விஜயகாந்த் கட்சியை அறிவித்த நாளில் மதுரை பகுதியில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்களின் புரட்சியை, சந்தோஷத்தை நேரடியாகப் பார்த்தேன்.


திரு.விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும் போது போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகுமுறையுடன் பதிலளித்தார். தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார். இது அவரது போராட்ட குணத்தை காட்டுகிறது. சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார். சினிமாவில் உள்ள சிலர்களால் அவர் அவமானங்களை சந்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பக்கம் நின்றார்.


கடந்த 2014ம் ஆண்டு பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் திரு விஜயகாந்த் அவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர் தமிழகத்தில் முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார். அனால், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்ததால் அவர் அந்த முதல்வர் நாற்காலி வரை செல்ல முடியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.


திரு. விஜயகாந்த்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனைவி ஸ்ரீமதி. பிரேமலதா அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன்” என கூறியுள்ளார். 


சிரஞ்சீவி 


நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள பதிவில் ”நமது ‘புரட்சிக் கலைஞர்’ ‘கேப்டன்’ விஜயகாந்த் இப்போது இல்லை என்ற செய்தி அறிந்து மனம் நொறுங்கியது. அவர் ஒரு அற்புதமான மனிதர், வெகுஜனங்களின் நாயகன், ஒரு பன்முக ஆளுமை மற்றும் ஒரு புத்திசாலித்தனமான அரசியல்வாதி. அவர் நேராக தெலுங்கு படங்களில் நடித்ததில்லை என்றாலும், தெலுங்கு ரசிகர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டவர்.


எங்களின் அன்பான ‘கேப்டன்’ நம்மை விட்டு வெகு சீக்கிரத்தில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்று விட்டார்!
அவரது ஏராளமான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என கூறியுள்ளார். 


மோகன்லால் 


சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் மோகன்லால் பதிவிட்டுள்ளார். 


நந்தமுரி பாலகிருஷ்ணா


நந்தமுரி பாலகிருஷ்ணா தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “ஆழ்ந்த இரங்கல் விஜய் சார்” என பதிவிட்டுள்ளார்.