லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி ஒன்றை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


இந்த படம் ரூ.540 கோடி வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் நாளுக்கு நாள் லியோ படம் தொடர்பான சர்ச்சைகள் படத்திற்கு பெரிய அளவில் பிளஸ் ஆக அமைந்தது. இதனிடையே லியோ படத்தின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா தொடங்கி படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், வழக்கம்போல குட்டிக்கதை சொல்லி ரசிகர்களை கட்டிப்போட்டார்.


”ஒரு காட்டுக்கு 2 பேர் வேட்டைக்கு போனாங்க. அந்த காட்டுல மான்,மயில், முயல், காகம், கழுகு என எல்லாம் இருக்கும். (கழுகு என சொன்னதும் மொத்தம் அரங்கமும் அதிர்ந்தது). காடுன்னு இருந்தால் இதெல்லாம் இருக்கும் தானே அதுக்காக சொன்னேன். இரண்டு பேர்ல ஒருத்தர் வில் அம்பு எடுத்துட்டு போனாரு, இன்னொருத்தர் ஈட்டி எடுத்து போனாரு. இதில் வில் எடுத்து போனவரு முயலை அடிச்சி தூக்கிட்டாரு. ஈட்டி எடுத்துட்டு போனவரு யானையை குறிவைக்கிறாரு. ஆனால் மிஸ் ஆகிடுச்சு. ரெண்டு பேரும் ஊருக்கு திரும்பி வர்றாங்க. இதுல யாருக்கு வெற்றி?


அந்த யானையை குறி வச்சவன் தான் வெற்றி அடைஞ்சவன். நம்மலால முடியுற விஷயம் தான் இலக்கு.  அதை பண்றதுல வெற்றி இல்ல. நம்மலால முடியாத ஒன்றை இலக்காக நிர்ணயிச்சி முயற்சி பண்றது தான் வெற்றி. அதனால் உங்களோட இலக்கை பெரிதாக வையுங்கள். நீ பெருசா கனவு காணு நண்பா..!” என தெரிவித்துள்ளார்.


இந்த கதையில் காகம், கழுகு என விஜய் சொன்னது ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய காகம், கழுகு கதைக்கான பதிலடி தான் என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.