நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பிய ‘தலைவா’ படம் தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களில் ரிலீசாகி இன்றோடு 10  ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


விஜய்யின் தலைவா:


ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு  விஜய் நடிப்பில் வெளியான படம் “தலைவா”. இந்த படத்தில் அமலா பால், சத்யராஜ், சந்தானம், நாசர், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படம் அந்த ஆண்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் ரிலீசுக்கு மிகப்பெரிய ப்ரோமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டது. ரசிகர்களும் மிகப்பெரிய ஆர்வத்துடன் படத்தை காண நள்ளிரவு முதலே தியேட்டர்களில் குவியத் தொடங்கினார்.






ஜெயலலிதா:


ஆனால் ரிலீசுக்கு சில நாட்கள் முன்பே  தலைவா படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக படத்தின் டைட்டிலின் கீழே “Time to lead" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. விஜய்க்கு அரசியல் ஆர்வம் உள்ளதை வெளிப்படுத்து விதமாக இது வைக்கப்பட்டிருந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாட தொடங்கியிருந்தனர்.  ஆனால் இந்த “Time to lead" வாசகம் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக தகவல் வெளியானது. 


படத்தை வெளியிடக்கூடாது என தியேட்டர்களுக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியது. சம்பந்தப்பட்ட வாசகத்தை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா ஓய்வுக்காக கொடநாடு சென்றிருந்தார். இதனால் விஜய், ஏ.எல்.விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் நேரடியாக கொடநாடு சென்று ஜெயலலிதாவை சந்திக்க முடிவு செய்து சென்றனர். ஆனால்  ஜெயலலிதாவோ அனைவரையும் கடைசி வரை சந்திக்கவே இல்லை. இதனால் தமிழகத்தில் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. 






அரசியல் ஆர்வம்:


ஆனால் திட்டமிட்டபடி தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தலைவா படம் வெளியானது. இங்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தான் வெளியானது. அதற்குள் பிற மாநிலங்களில் படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் பரவ தொடங்கியதால் இப்படம் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு இப்படம் நெருக்கமான ஒன்றாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது. 


தலைவா படத்தில் தளபதி..தளபதி இடம்பெற்றிருந்தது. இது விஜய்யின் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. இன்றும் விஜய்யின் அரசியல் வருகையாக பார்க்கப்படுகிறது. தலைவா பிரச்சினையால் அதிருப்தியடைந்த விஜய் அப்போதைய ஆளும் அதிமுக அரசை கிடைத்த இடங்களில் எல்லாம் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். இதனைத் தொடர்ந்து வெளியான பெரும்பாலான விஜய் படங்கள் பெரும் பிரச்சினைகளுக்குப் பிறகே ரிலீசாகின. இது அவரது ரசிகர்களுக்கும் பழகிப்போன ஒன்றாகவே மாறிவிட்டது என்பதே நிதர்சனம்.