வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாசிட்டிவ்  ரிவ்யூக்களை அள்ளி வருகிறது.


விடுதலை:


சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் விடுதலை திரைப்படம், குறிப்பாக காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உச்சம் பெற்றுள்ள நடிகர் சூரிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி போராளியாக நடித்துள்ள நிலையில் கௌதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், தமிழ்   உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் 2  பாகங்களாக வெளிவரும் எனக் கூறப்பட்ட நிலையில் ,நேற்று விடுதலை பாகம் 1 முன்னதாக வெளியானது.


முதல் நாள் வசூல்:


வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில்,  இளையராஜா வெற்றிமாறனுடன் முதன்முறையாக பணிபுரிந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  முன்னதாக படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. சுமார் நான்கு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இந்தப்படம் நேற்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் விடுதலை படம் முதல் நாளில் சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியதுடன், உலகம் முழுவதும் 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


அதிகரிக்கும் வசூல்:


கடந்த 16 ஆண்டு கால திரை வாழ்வில் வெற்றிமாறன் சமூகக் கருத்துகளைப் பேசும் படங்களை ஜனரஞ்சகமாகக் கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏறபடுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு தாண்டி வெற்றிமாறனுக்கும் அவரது படங்களுக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டில் முதல் நாளிலேயே பிரமாண்ட ஓப்பனிங்கைப் பெற்ற ஐந்தாவது படமாக விடுதலை உருவெடுத்துள்ளது. 


மொத்தம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் நாளான இன்று படம் 10 கோடிகள் வரை உலகம் முழுவதும் வசூலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று விடுதலை படத்தில் உடன் பணிபுரிந்த 25 நபர்களுக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை வெற்றிமாறன்  பரிசாக வழங்கினார். அதேபோல் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கும் தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. 


இரண்டாம் பாகம் எப்போது?


இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியர் கதாபாத்திரத்துக்கு லீட் கொடுத்து முதல் பாகம் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.


மேலும் படிக்க: Crime: பைக்கில் முன்னாடியும், பின்னாடியும் பெண்கள்.. நடுவில் அமர்ந்து நடுரோட்டில் வீலிங் செய்த இளைஞர்..! குவியும் எதிர்ப்புகள்..!