தமிழ் சினிமாவில் அன்று தொடங்கி இன்று வரை தஞ்சை மண்ணில் இருந்து வந்த பல இயக்குனர்கள் திரையுலகை கலக்கியுள்ளார். இயக்குனர் சிகரம் அய்யா பாலசந்தர் முதல் இயக்குனர் ஷங்கர் வரை அதற்கு சான்று பகர்கின்றனர். அவர்களை போலவே தஞ்சை தரணியில் குடந்தையை அடுத்துள்ள திருச்சேறை என்ற ஊரில் இருந்து ஒரு அற்புதமான இயக்குனரை 20 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா கண்டறிந்தது. 


"ஆனந்தம்" என்ற தனது முதல் படத்திலேயே குடும்பப்பட ரசிகர்களை கவர்ந்தார் அவர். அவர் தான் பிரபல இயக்குனர் லிங்குசாமி அவர்கள். தனது முதல் படத்திலேயே மலையாள சூப்பர்ஸ்டாரை இயக்கிய பெருமை இவருக்கு உண்டு. கடந்த 20 ஆண்டுகளில் 9 படங்கள் மட்டுமே இவர் இயக்கியுள்ளார் என்றபோது என்றபோதும் இவருடைய படங்களுக்கு தனி மவுசு உண்டு என்பதே நிதர்சனம்.




மாதவன் நடிப்பில் ரன், தல நடிப்பில் ஜி, விஷாலின் சண்டக்கோழி, விக்ரமின் பீமா மற்றும் கார்த்திக்கின் பையா என்று எல்லாமே சூப்பர்ஹிட் திரைப்படங்கள். இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு வெளியான சண்டக்கோழி 2 படத்தை இயக்கிய நிலையில் தற்போது அவர் தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் அவருடைய 19வது படத்தை லிங்குசாமி இயக்கவுள்ளார். 


இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக தோன்ற ஸ்ரீனிவாச இந்த படத்தை தயாரிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.