வெங்கட்பிரபுவின் மங்காத்தா படம் வெளியாகி 11 வருடங்கள் கழிந்த நிலையில் அதனைக்கொண்டாடும் விதமாக அவர் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 


நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  ‘மங்காத்தா’. சத்யராஜிற்காக வெங்கட்பிரபு எழுதிய கதையை அஜித் ஏதேச்சையாக கேட்க, இதில் தானே நடிக்கிறேன் என்று சொல்ல, மங்கத்தா படம் ஆரம்பமானது. நீண்ட நாட்களாக ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற அஜித்தின் ஆசையும் இந்தப்படத்தின் மூலம் அவருக்கு நிறைவேறியது. 


 






சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தொந்தியுடன் கோர்ட் சூட் அணிந்து அஜித் வர, ஒட்டுமொத்த திரையரங்கமும் கரகோஷத்தால் ஆர்ப்பரித்தது என்றே சொல்லலாம். அந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் ட்ரெண்ட் செட்டராகவும் மாறியது. தொடர்ந்து பல நடிகர்கள் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க முன்வந்தனர். 


 






ஐபிஎல் ஏலத்திற்காக கொண்டுவரப்பட்ட 500 கோடி ரூபாய் பணத்தை அஜித்தின் தலைமையிலான குழு எப்படி திருடுகிறது, அந்தப்பணம் அவர்களை என்ன செய்கிறது என்ற ஒன்லைனை ஆக்சன் கலந்து  கொடுத்திருந்தார் வெங்கட்பிரபு. ஆரம்பத்தில் காமெடியில் கலக்கிய அஜித்தின்  ‘ நானும் எத்தன நாளுதான் நல்லவனாவே நடிக்கிறது’ என்ற வசனம் மிகவும் பிரபலமானது. அஜித்திற்காக வைக்கப்பட்ட பல  கூஸ்பம்ஸ் மொமண்டுகள் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருந்தன. 


 






குறிப்பாக த்ரிஷாவின் அப்பாவை காரில் இருந்து தள்ளிவிடும் காட்சி, இண்டர்வெலில் வரும் அஜித்தின் பைக் சேஸிங் காட்சி, கேரம் போர்டு முன் இருந்து கொண்டு அவர் போடும் திட்டம் சம்பந்தமான காட்சி, த்ரிஷாவின் அப்பாவை- கன்பாய்ன்டில் லாக் செய்வது, அர்ஜூனுடன் மோதுவது தொடர்பான காட்சி உள்ளிட்டவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இவையெல்லாவற்றுக்கும் மேலாக யுவனின் இசை அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாப்பட்டது. வெங்கட் பிரபு கேரியரிலும் பெரிய ப்ரேக்காக இந்தப்படம் அமைந்தது. இந்தப்படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் கழிந்த நிலையில், அதனைக்கொண்டாடும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துடன் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.