பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விக்னேஷ் சாதி வெறியுடன் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


பாலு மகேந்திராவின் வண்ண வண்ணப் பூக்கள் படத்தில் முதலில் நடிக்க தேர்வான நடிகர் விக்னேஷ் பின்னர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு சின்னதாயி படத்தின் மூலம் நடிகராக அவர் அறிமுகமானார். தொடர்ந்து அம்மா பொண்ணு, கிழக்கு சீமையிலே, உழவன், மனதில் ஒரு பாட்டு, பசும்பொன், செல்லக்கண்ணு, நாடோடி மன்னன், மண்ணுக்கு மரியாதை, ராமன் அப்துல்லா, கண்ணதிரே தோன்றினாள், சுயம் வரம், புதுக்குடித்தனம், அப்பு, சூரி,ஆச்சார்யா , கௌரவர்கள், குடியரசு, ஆனந்தம் விளையாடும் வீடு என பல படங்களில் நடித்துள்ளார். 


மிகையில்லா நடிப்பு, கிராமத்து கேரக்டருக்கு ஏற்ற நபர் ஆகியவை விக்னேஷ் என்றால் ரசிகர்கள் நினைவுகொள்ளும் அளவுக்கு பிரபலமடைந்திருந்தார். இப்படியான நிலையில், தற்போது வித்யா நம்பர் 1 என்கிற ஜீ தமிழ் சீரியலிலும் விக்னேஷ் நடித்து வருகிறார். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  





அதில், “நடிகர் விக்னேஷ். பல படங்களில் நாயகனாக, துணைப்பாத்திரங்களாக நடித்தவர். இப்போது எந்த படங்களும் இல்லாததால் ஏதோ வணிகம் செய்கிறார் போல. எவ்வளவு சாதி வெறியோடு பேசுகிறார் பாருங்கள். தமிழ்நாடு காவல்துறை இவர்மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு ஆடியோவும் உள்ளது. 


அந்த ஆடியோவில், “சீரியல் பேமன்ட் தொடர்பாக விக்னேஷ் யாரோ ஒருவருடன் பேசுவதாக உரையாடல் இடம் பெற்றுள்ளது. அப்போது ஏற்பட்ட கருத்து மோதலில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என அந்த நபரை சொல்லி, கொச்சையாக இழிவுபடுத்தி திட்டுவதும் இடம் பெற்றுள்ளது”. ஆனால் உண்மையில் இதை பேசியது விக்னேஷ்தானா? என்பது பின்வரும் விசாரணையில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.