கல்லூரி மாணவி சத்யஸ்ரீ மரணம் குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை பரங்கிமலையில் உள்ள ரயில் நிலையத்தில் சத்யஸ்ரீ என்ற கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். இதில் துரைப்பாக்கம் அருகே பதுங்கியிருந்த சதீஷை என்ற இளைஞரை கைது செய்யப்பட்டார். 






ஆதம்பாக்கம் ராஜா மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலரின் மகனான சதீஷூம், அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் பெண் தலைமை காவலரின் மகளான சத்யஸ்ரீயும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இருவரின் நட்பானது படிப்படியாக வளர்ந்து காதலாக மாறியதாகவும், ஒரு கட்டத்தில் அக்காதலை சத்யா முறித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 






இதனிடையேவழக்கம்போல கல்லூரி செல்வதற்காக சத்யா பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சதீஷ் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கடற்கரை நோக்கி செல்லும் ரயில் நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தப்போது சத்யாவை பிடித்து சதீஷ் தள்ளியுள்ளார். இதில் ரயிலில் சிக்கிய சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சதீஷை பிடிக்க முயற்சிப்பதற்குள் அவர் அங்கிருந்து தப்பியோடினார்.இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் அக்டோபர் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்யஸ்ரீ மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 






இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, மாணவி சத்யஸ்ரீ மரணம் குறித்து பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாதென ஒரு தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன் தனக்குக் கிடைக்காததெல்லாம் யாருக்கும் கிடைக்கக்கூடாதென மனிதகுலம் நினைத்திருந்தால் இந்த பூமி ஒரு மண்டையோடு போலவே சுற்றிக்கொண்டிருந்திருக்கும் கிட்டாதாயின் வெட்டென மற என தெரிவித்துள்ளார்..