மாமன்னன் படத்தைப் பாராட்டி இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்டிருந்த நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து நடிகரும்  அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பதில் ட்வீட் செய்துள்ளார்.



"திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி ஸ்டாலின் அறிந்தே இருப்பார், அதைக் களைவதற்கான வேலையை மாமன்னன் திரைப்படத்தின் வாயிலாக தொடங்குவார் என்றும் படத்தைப் பாராட்டியும்  இயக்குநர் பா.ரஞ்சித் இன்று காலை ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலளித்து தற்போது உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.


“மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்தக் கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.


அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம். ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார்.


`பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.  ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காணப் போராடும்  நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. 


 ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். 


இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.


இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஜூன். 29ஆம் தேதி வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இது தான் தன் கடைசி படம் என அறிவித்துவிட்ட நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறன.


இந்நிலையில் படம் வெளியாகி கலவையான கருத்துகளை கடந்த 4 நாள்களாகப் பெற்று வருகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் வரிசையில் மாரி செல்வராஜ் மூன்றாவது படமாக இப்படத்தை இயக்கியுள்ள நிலையில், படம் பேசும் அரசியல் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


பாராட்டுகளும் விமர்சனங்களும்


மேலும் சினிமா, அரசியல் என இரு வட்டாரத்திலும் இப்படம் பேசுபொருளாகி கவனமீர்த்து வருகிறது. அதேபோல் நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இருவரது நடிப்பும் அனைத்து தரப்பு ஆடியன்ஸ்கள் மத்தியிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.


மற்றொருபுறம் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாளில் நிகழ்த்திய மேஜிக்கை இப்படத்தில் செய்யவில்லை என்றும்,  திரைக்கதையில் தொய்வு இருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.