போன முறை மிஸ் ஆகிடுச்சு.. ஆனால், இந்த தடவை மிஸ் ஆகாது என மாவீரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேய எமோஷ்னலாக பேசியுள்ளார். 


மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ளனர். இவர்களுக்கு வில்லனாக மிஷ்கினும், முக்கிய கதாபத்திரத்தில் சரிதாவும் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் 14ம் தேதி தமிழ், தெலுங்கு என மாவீரன் இரு மொழிகளில் திரைக்கு வருகிறது. 


இந்த நிலையில் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில், இயக்குநர் மிஷ்கின், சிவகார்த்திகேயன், மாரிசெல்வராஜ், சரிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், ”சிவகார்த்திகேயனை முதலில் பார்க்கும் போது மிமிக்கிரி செய்வேன் என்றார். அப்போ, நீ பெருசா சாதிக்கனும்னு நான் சொன்னேன். இப்போ அவர் சாதித்து விட்டார். சரிதா மேடம் என்னிடம் சிவகார்த்திகேயனை ‘ரஜினி போல அடக்கமானவர்’ என கூறுவார். ஆனால், சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்லை. ரஜினியே தான்” என்று புகழ்ந்தார். தொடர்ந்து பேசிய சரிதா, “சிவகார்த்திகேயனின் லுக்கும், அவரது பேச்சும் ரஜினி போல் இருப்பதால், இனிமே சிவாவை ’குட்டி ரஜினி’ என அழைப்பேன் என்றார். 


இவர்களை தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், முதலின் நான் நடித்த மெரினா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வெறும் 50 பேர் முன்னிலையில் நடந்தது. இப்போது இத்தனை ரசிகர்களின் முன்னிலையில் எனது 20 வது படத்தின் ஆடியோ லாஞ்ச் நடக்கும் போது மிகவும் எமோஷனலாக இருக்கிறது” என்றார். “ நீங்க பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொன்னிங்க....ரஜினி சார் பயங்கரமான ஆள்.. நானும் ரஜினி சார் மாதிரி எப்பவும் அடக்கமாக இருக்கணும்னு நினைக்கிறது உண்டு... கண்டிப்பா அப்படி இருப்பேன் சார்” என்றார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அது குறித்து பேசிய சிவகார்த்திகேயன் “போன படம் மிஸ் ஆயிடுச்சு சாரி அதுக்கு... ஆனா இந்த தடவை மிஸ் ஆகாது” என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 


விஜய், அஜித் பாணியில் தனது ரசிகர்களுக்கு,”என்னை நீங்கள் ரசிப்பதற்கு முன், உங்களை ரசியுங்கள், உங்கள் குடும்பத்தை ரசியுங்கள்” என அட்வைஸ் செய்தார். நிகழ்ச்சியில் வெளியான மாவீரன் ட்ரெய்லரில், முதலில் கையில் விலங்கு பூட்டப்பட்டு ஒருவரை அழைத்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. அது சிவக்கார்த்திகேயனாக இருக்கலாம். மிஷ்கின் அரசியல் ஆளுமையாகவும், சிவகார்த்திகேயன் சாதாரண சாமானியனாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பத்திரிகை நிறுவனத்தில் கார்ட்டூனிஸ்டாக பணிபுரியும் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக சரிதா நடித்துள்ளார். வழக்கம் போல சிவகார்த்திகேயனுக்கு நண்பணாக யோகிபாபு நடித்துள்ளார். சில காட்சிகளில் பயந்து அடி வாங்கும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்த காட்சிகளில் திருப்பி அடிக்கிறார்.