நடிகர் கார்த்திக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் அவரது படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல தெலுங்கிலும் அவரது படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து, மெய்யழகன் படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பங்கேற்றார்.



லட்டு பற்றி பேசிய கார்த்தி:


தற்போது ஆந்திரா முழுவதும் புகழ்பெற்ற திருப்பதி கோயிலின் பிரசாதமான லட்டு வழங்கப்படுகிறது, இந்த நிலையில், லட்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலக்கப்பட்ட குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.


இந்த சூழலில், நடிகர் கார்த்தியின் மெய்யழகன் தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிறுத்தை படத்தில் இடம்பெற்ற லட்டு நகைச்சுவை காட்சியை காட்டி லட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் கார்த்தி அது ஒரு சென்சிட்டிவான விவகாரம் அது. எனக்கு அது வேண்டாம். லட்டே வேண்டாம் என்றார். அவரது பேச்சுக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து சிரித்தனர்.






ஆவேசப்பட்ட பவன் கல்யாண்:


அவரது பேச்சு குறித்து ஆந்திர துணை முதலமைச்சரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, லட்டை வைத்து நகைச்சுவை செய்கிறார்கள். திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கூட பேசினார்கள். லட்டு சென்சிட்டிவான விஷயம் என்று கூறியுள்ளார். ஒருபோதும் அப்படி கூறாதீர்கள். எப்போதும் அப்படி பேசக்கூட முயற்சிக்காதீர்கள். ஒரு நடிகராக உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தையை கூறும் முன்பு 100 முறை யோசிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.


மன்னிப்பு கேட்ட கார்த்தி:


பவன் கல்யாண் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக, கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பவன்கல்யாண் ஐயா, உங்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன், எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை அன்புடன் பின்பற்றுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணுக்கு அவரது அண்ணன் சிரஞ்சீவி அளவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் தெலுங்கு திரையுலகில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மெய்யழகன் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார்.






தீவிர விசாரணையில் ஆந்திர அரசு:


லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஆந்திர அரசு அதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை நியமித்துள்ளது. மேலும், ஆந்திர துணை முதலமைச்சரான பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்து விரதம் இருந்து வருகிறார். இந்தியாவின் பணக்கார கோயிலான திருப்பதிக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்திற்கு மத்திய உணவு தர நிர்ணய அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.