இயக்குநர்கள் ஹெச். வினோத், விக்னேஷ் சிவனும் இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை சென்றிள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


நடிகர் அஜித்தின் பொங்கல் மாஸ் வெளியீடான துணிவு படம் ஜன.11ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வருகிறது.


நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பின் இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார்- தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள துணிவு படம் நேற்று முன் தினம் (ஜன.11)வெளியானது.


ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, பகவதி பெருமாள், மோகன சுந்தரம், ஜான் கொக்கைன், அஜய் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். ஜிப்ரான் இசையில் பொங்கல் ரிலீசாக வெளிவந்துள்ள துணிவு, கடந்த இரண்டு நாள்களாக வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


சமூக வலைதளங்களில் ஒருபுறம் துணிவு படம் ட்ரெண்டாகி வரும் நிலையில், முதல் நாள் வசூல் மட்டுமே உலகளவில் 39 கோடி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்நிலையில் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட இயக்குநர் ஹெச்.வினோத் தற்போது படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் இருமுடி பூண்டு தற்போது சபரிமலை சென்றுள்ளார். வலிமை பட தோல்வியால் சோர்ந்து போய் இருந்த ஹெச்.வினோத், தற்போது துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு இருமுடி கட்டி சபரிமலை செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


அதே போல் ஏகே 62 படத்துக்காக அடுத்ததாக அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவனும் இருமுடி கட்டி சபரிமலை சென்றுள்ள புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 






இந்த இருவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி  வருகின்றன.