நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திருச்சிற்றம்பலம் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், சென்னை ரோகினி திரையரங்கில் திரையிடப்பட்ட காலை காட்சியில், நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பங்கேற்றனர். 






பொதுவாக ரோகினி தியேட்டரில் பிரபல நடிகர்களின் முதல் காட்சிகள் திரையிடப்படும் போது, சம்மந்தப்பட்ட பிரபலங்கள் அந்த காட்சியில் பங்கேற்று, ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் உள்ளிட்ட திருச்சிற்றம்பலம் படக்குழுவினர் சிலர், இந்த சிறப்பு காட்சியில் பங்கேற்று ரசிர்களை உற்சாகப்படுத்தினர். 


ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் நடிகர் தனுஷ் நடித்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதால், அதை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் வந்திருந்தனர். வந்த இடத்தில் இரட்டை போனஸாக, நடிகர் தனுஷ் நேரடியாக வந்ததும், அவரை கண்டதும் ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆரவாரம் செய்ததும், கண்ணுக்கு இனிமையான காட்சியாக இருந்தது. 






சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஜவஹர் மித்ரன் இயக்கியுள்ளார். நித்யா மேனன் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில் , பாடல்கள் அனைத்தும்  ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்களிடம் படம் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. தொடர்ந்து படம் தொடர்பான ப்ரொமோ பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தான், திருச்சிற்றம்பலம் இன்று வெளியாகியுள்ளது. 






இதற்கிடையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் தங்கள் அபிமான ஹீரோவின் படம் ரிலீஸ் ஆவதால், மெகா கட்அவுட்கள் வைக்கப்பட்டு தியேட்டரை ஒரு வழியாக்கியுள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.