அன்றைய ஆந்திராவின் குக்கிராமம், இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தின் கோனேடம்பேட்டை என்கிற குக்கிராமம் தான் எஸ்.பி.பி., பிறந்த ஊர். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என இந்திய சினிமாவில் நீங்கா இடம் பிடித்த பாலு என்கிற பாலசுப்பிரமணியம் தான் இன்றைய நாளின் ஹீரோ. இன்று அவருக்கு 75வது பிறந்தநாள். 74வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், ஒவ்வொரு மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடுநிலா பாலுவை நினைவூட்டுவதில் பெருமை கொள்கிறது ABP நாடு.




ஒதுக்கப்பட்ட எஸ்.பி.பி., மீட்ட ஜானகி!


கிராமத்தின் ஒரே பிராமண குடும்பம் எஸ்.பி.பி.,யோடது! சொற்பொழிவு தான் அவர் தந்தையின் பணி. அதில் கிடைக்கும் 100 ரூபாயில் தான் அந்த பெரிய குடும்பத்தை பார்க்க வேண்டும். சிறு வயதிலிருந்தே பாலுவுக்கு பாடப்பிடிக்கும். சிறுவன் குரல் என்பதால், பெரும்பாலும் ஜானகி, சுசிலா வாய்ஸ் தான் அவரது பேவரிட். ஒவ்வொரு பகுதியில் நடக்கும் பாட்டு போட்டியிலும் கலந்து கொள்ளும் எஸ்.பி.பி., கூடூர் பாட்டு போட்டியில் தொடர்ந்து 2 ஆண்டுகள் முதலிடம் பிடித்துள்ளார். 3ம் ஆண்டு விழாவில் 2ம் இடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த பரிசளிப்பு விழாவில், ஜானகி தான் ஹெஸ்ட். பரிசு பெற்றவர்கள் அவர் முன் பாட வேண்டும். பாடி முடிந்ததும், ஏற்பாட்டாளர்களை அழைத்த ஜானகி, ‛‛2ம் இடம் பிடித்த பையன் தானே நல்லா பாடுறான்… அவனுக்கு தானே முதல் பரிசு கொடுக்கனும்! இப்படியெல்லாம் அரசியல் பண்ணாதீங்க…’ என, திட்டி, ஒதுக்கப்பட்ட பாலுவை, மீ்ட்டு எடுத்துள்ளார். ‛தம்பி… நல்லா பாடுற… சினிமாவுல பாடு ’ என, ஜானகி கூற, ‛எனக்கு எதுவுமே தெரியாதே…’ என பாலு கூற, ‛நான் மட்டும் எல்லாம் தெரிஞ்சா வந்தேன்…’ என, ஜானகி கூற, அப்போது தான் சினிமாவில் பாடலாம் என்கிற விதை பாலு மனதில் பதிந்துள்ளது.




எம்.எஸ்.வி., போட்ட கண்டிஷன்; தவித்த எஸ்.பி.பி.,!


1963ல் ஆந்திரா கிளப் சார்பில் தேசிய அளவில் தெலுங்கு பாடல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 300 பேர் பங்கேற்ற அந்த போட்டியில் சினிமா அல்லாத பாடல் தான் பாட வேண்டும். அதில் பாடிய பாலுவை அழைத்த இசையமைப்பாளர் கோதண்டபாணி, ‛நல்லா பாடுற… நாளைக்கு அலுவலம் வா…’ என, அழைத்துள்ளார். தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்த போது, ‛சின்ன பையன்… இன்னும் குரல் மாறல… 2 வருசம் ஆகட்டும்னு,’ சொல்லிருக்கார். எஸ்.பி.பி.,க்கு வருத்தம். ஆனாலும் கோதண்டபாணிக்கு விட மனசில்ல. ‛‛தம்பி, கவலைப்படாத எப்படியாவது உன்னை பாட வைக்கிறேன்,’’ என கூறியுள்ளார். அவரிடம் முகவரி கூட கொடுக்காமல், ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார் எஸ்.பி.பி. 2 ஆண்டுகளாக எஸ்.பி.பி.,யை தேடியிருக்கார் கோதண்டபாணி. அதுக்கு அப்புறம் ஆளை கண்டுபிடிச்சு 1966ல் தெலுங்கில் ஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா படத்தில் தன் எண்ணிக்கையை துவக்கினார் எஸ்.பி.பி. தமிழில் வாய்ப்பு வருகிறது. ஆடிஷனில் எம்.எஸ்.வி.,யிடம் இந்தி பாடல் பாடியுள்ளார். தமிழில் பாட கூறிய போது, ‛நிலவே என்னிடம் நெருங்காதே…’ பாடல் பல்லவியை பாடியுள்ளார். ‛தமிழ் கத்துட்டு வா…’ காத்திருக்கிறேன்,’ என, எம்.எஸ்.வி., கூறியுள்ளார். வாய்ப்பு இருக்கு, மொழி இல்லையே என நொந்து போன பாலு, வெறியோடு தமிழயை கற்கத் துவங்கினார். 2 ஆண்டுகளுக்கு பின், ஓட்டல் ரம்பா படத்தில் ‛அத்தானோடு இப்படி..’’ என்கிற பாடல் தான் பாலுவின் முதல் பாடல். ஆனால் அது வெளியாகவில்லை. அதன் பின் சாந்தி நிலையத்தில் வெளியான ‛இயற்கை எனும் இளைய கன்னி,’ பாடல் தான், எஸ்.பி.பி.,யின் தமிழ் எண்ட்ரி!



எம்.ஜி.ஆர்.,யை காக்க வைத்த எஸ்.பி.பி.,!


அதிர்ஷ்டம் மீது அலாதி நம்பிக்கை கொண்டவர் பாலு! அப்படி தான் ஒரு நாள் அவர் கதவை தட்டியது. ‛என் விழியும்… உன் வாளும் சந்தித்தால்,’ பாடலின் தெலுங்கு வெர்சனை ஸ்டூடியோவில் பாடியுள்ளார் பாலு, எதார்த்தமாக அங்கிருந்த எம்.ஜி.ஆர்., ‛நம்ம பாட்டாச்சே… ஆண் குரல் யாரோடது,’ என கேட்டுள்ளார். உதவியாளர்கள் விபரத்தை கூறியுள்ளனர். ராமபுரம் வீட்டில் அடிமைப்பெண் டிஸ்கஷனில் இருந்த எம்.ஜி.ஆர்., இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனிடம் பாலுவை விசாரித்துள்ளார். நல்ல சாய்ஸ் என அவரும் ஆதரித்துள்ளார். ஒப்பந்தமான பாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு. ஒத்திகை தயாராகிவிட்டது. தயாரிப்பு மேலாளர்,எஸ்.பிபி வீட்டுக்கு வருகிறார். படுக்கையில் பாலு. ‛என்னப்பா இப்படி வாய்ப்பை விட்டுட்ட,’ என கூறிவிட்டு கிளம்பிவிட்டார். 15 நாள் கழிச்சு, அதே நபர் மீண்டும் வீட்டுக்கு வந்து, எம்.ஜி.ஆர்., அழைக்கிறார் என்றிருக்கிறார். ‛சரி.. வேறொரு வாய்ப்பை தரப்போகிறார்…’ என, பாலுவும் புறப்பட்டுள்ளார். அதே பாடல் தான் அவருக்காக காத்திருந்தது. அப்படியே திகைத்து போனார் பாலு, ‛எனக்காக காத்திருந்தீர்களா…’ என, எம்.ஜி.ஆர்.,யிடம் கேட்க, ‛நான் வேறு பாடல் வாய்ப்பு உனக்கு தந்திருக்கலாம்; ஆனால், எம்.ஜி.ஆர்.,க்கு பாடப்போறோம்ன்னு… ஊரெல்லாம் சொல்லிருப்ப. நான் ஆளை மாத்திட்டா அது உனக்கு ஏமாற்றம். அதுமட்டுமில்லாமல், எம்.ஜி.ஆர்.,க்கு பாட்டு பிடிக்கலை போலனு சொல்லி, உன் எதிர்காலத்தை கெடுத்துடுவாங்க…’ அதான் காத்திருந்தேன், எனக்கூறியுள்ளார் எம்.ஜி.ஆர்.,யி்ன் அந்த பெருந்தன்மையில் வந்த பாடல் தான், ஆயிரம் நிலவே வா…



 பாலுவுக்காக பாதையை மாற்றிய சிவாஜி!


பாடலின் வெற்றி, பாடிய பாடகருக்கு மட்டுமல்ல, அதில் பங்கேற்ற நடிகருக்கும் சேரும் என தீர்க்கமாக நம்பினார் பாலு. டி.எம்.எஸ்., வாய்ஸ் சிவாஜிக்கு அப்படியே பொருந்திய காலம் அது. சுமதி என் சுந்திரி படத்தில் சிவாஜிக்கு பாட வாய்ப்பு. பாலு பாட வந்ததை பார்த்த சிவாஜி, ‛இங்கே பாருப்பா… எனக்காக வாய்ஸ் மாத்தாத.. நீ உன் ஸ்டைலில் பாடு… நான் மேட்ஜ் பண்ணிக்கிறேன்,’ என கூறியுள்ளார். அப்படி பிறந்தது தான் ‛பொட்டு வைத்த முகமோ...’  பாடல்! தமிழ் சினிமா கொண்டாடிய இரு துருவங்களும், தங்களின் முதல் பாடலில் பாலுவுக்கு காட்டிய பெருந்தன்மையும், அதற்கு முழு தகுதியானவராக பாலு நடந்து கொண்டதும் தான் அதன் பின் 35 ஆயிரம் பாடல்களை பாலு கடக்க காரணமானது.



 ரஜினி, கமலுக்கு பாடியதை மறந்த பாலு!


80களில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், உலகநாயகன் கமலுக்கும் ஓப்பனிங்கில் தொடங்கி பினிசிங் வரை அனைத்து பாடலும் எஸ்.பி.பி.,குரல் தான். அவர் குரல் இல்லாத படங்களே அவர்களுக்கு இல்லை எனலாம். ஆனால் அவர்களுக்கு பாடிய முதல் பாடல் எது என்பது பாலுவுக்கு தெரியாது என்பது தான் சுவாரஸ்யம். பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இது தான் , ‛ஆஹா… நிறைய பாடியிருக்கேன்…. ஆனால் எந்த பாட்டுனு தான் தெரியல… பாலசந்தர் படமா தான் இருக்கணும்….’ என, அசட்டு சிரிப்போடு, பதிலளித்தார் பாலு. 35 ஆயிரம் பாடல்களை கடந்தவராச்சே! ஆனாலும், தன் மூச்சு இருக்கும் வரை அவர்களுக்காக பாடிக் கொண்டே இருந்தார். நடிகராகவும் எஸ்.பி.பி., ஜொலித்தது உண்டு. ஒரு விழாவில் பேசிய கமல், ‛பாலுவின் மனைவிக்கு நன்றிசொல்லவேண்டும்… அவர் உடல் பெரிதாகவில்லை என்றால், எங்கள் பாடு திண்டாட்டமாகியிருக்கும்,’ என புகழ்ந்தார். அந்த அளவிற்கு நடிப்பிலும் பெயர் வாங்கியவர் பாலு.


நான்… ராஜா சார்… அப்புறம் அந்த வாழைப்பழம்! இசைஞானியின் இந்த முகம் தெரியுமா!


மூத்தவர், ஆனாலும் இளையராஜா இளையவர்!


வயதில் இளையராஜா மூப்பு என்றாலும், அனுபவத்தில் பாலு மூத்தவர். ஆனாலும் அவர்களுக்குள் ஒரு வித ஈர்ப்பு இருந்தது. ஆர்க்கஸ்ட்ரா நட்பு இருந்ததால் சினிமாவில் எளிதால் மெர்ஜ் ஆகினர். ‛வாடா… போடா…’ நேசம் அவர்களது! பொதுவாக எந்த கலைஞரும், இன்னொரு கலைஞரை கொண்டாட மாட்டார். ஆனால், பாலு தனது இசைப்பாளர்களை கொண்டாடிக்கொண்டே இருப்பார். தனக்கு மேடை கிடைக்கும் போதெல்லாம் சம்மந்தப்பட்ட இசையமைப்பாளரை வர்ணிப்பார். அவரிடம் அதிகம் கொண்டாடப்பட்டவர். இசைஞானி இளையராஜா. ‛காலையில் நம் முகத்தை பாத்ரூமில் பார்த்தால், நமக்கே பிடிக்கமாட்டேங்குது… எப்படி நம்ம பாட்டை தொடர்ந்து கேட்குறாங்க… அதில் இசையமைப்பாளர்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது,’ என்பார் பாலு. அந்த வகையில் முத்தான பாடல்களை எனக்கு தந்தது, இளையராஜா என்பார். பலமொழிகளில் அவருடன் பயணித்த நண்பர் அவர்.



பில் கிளிண்டன் வைத்த கோரிக்கை!


அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனை சந்திக்கும் வாய்ப்பு, பாலுவுக்கும் லதா மங்கேஸ்கருக்கும் கிடைத்தது. அவரிடம் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பாலு உரையாடியிருக்கிறார். அப்போது பேசிய கிளிண்டன், ‛நீங்கள் 35 ஆயிரம் பாடல்கள் பாடியதாக கூறுகிறார்கள். பாடுவதை தவிர வேறு என்ன வேலை செய்வீர்கள்..?’ என கேட்டுள்ளார். அதை கேட்டு, பாலுவும், கிளிண்டன் குடும்பத்தாரும் வாய்விட்டு சிரித்துள்ளனர். ‛நான் இந்தியா வரும் போது, நீங்கள் எனக்காக பாட வேண்டும்…’ என கேட்டுள்ளார் கிளிண்டன். கண்டிப்பாக எனக்கூறிய பாலு, ‛அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை,’ என வருந்தியதும் உண்டு.


55 ஆண்டுகளுக்கு முன் ஊடக அறம் பேசிய எம்.ஜி.ஆர்.,! ஏன் உதயமானது சந்திரோதயம்?


மொழிகளின் காதலர் எஸ்.பி.பி.,!


தாய் மொழி தெலுங்கு என்றாலும், அவர் பாடாத மொழியே இல்லை. ஏதோ ஏனோ தானோ என பாடமாட்டார். மொழியை கற்று, புரிந்து பாடுவார். பிழையாக பேசுவது கூட அவருக்கு பிடிக்காது. வார்த்தையில் நேர்த்தி வேண்டும் என்பவர். இசையை காதலித்தவர், பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர். பிற பாடகர்களுடன் நட்பில் இருந்தவர். ஜாலிப் பேர்வழி. தான் இருக்கும் பகுதியை கலகலப்பாக்குபவர். ‛விதியே கதை எழுது.....’ ‛தெய்வம் தந்த வீடு…’ ‛ நீ ஒரு காதல் சங்கீதம்..’ போன்ற பாடல்களை, தான் பாடியிருக்கலாமே என பிற பாடல்கள் மீதும் ஏங்குபவர். ஒரு மொழியில் வேறோருவர் பாடி அந்த பாடல் பிடித்துவிட்டால், இன்னொரு மொழிக்கு அந்த பாடல் வரும் போது, அதற்கான வாய்ப்பை எனக்குத் தாருங்கள், என கேட்டு வாங்கி பாடி மகிழ்ந்தவர்.




ரசிகர்களுடன் கலந்தவர் எஸ்.பி.பி!


இறக்கும் வரை அவரது வயது பலருக்கு தெரியாது. பாடிக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு ஊரிலும் எஸ்.பி.பி., கச்சேரி நடந்து கொண்டே இருந்தது. பணம் அவருக்கு பெரிதல்ல. ரசிகர்களுடன் கலக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. உலக அரங்கில் இசையால் வலம் வந்து கொண்டே இருந்தார். குரலில் துளி அளவும் முதுமை குடியேற அனுமதிக்காதவர். நல்ல மனிதர்! எஸ்.பி.பி., என்கிற சகாப்தம் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதே நமக்கு பெருமை. விருதுகள் எல்லாம் அவர் வீட்டில் சரணாகதியடைந்திருக்கும். அதில் துளி கூட தலையில் ஏற்றாமல் கடைசி வரை புதிய பாடகராகவே அரங்கேற்றியவர். பாடும் நிலா பாலு இல்லாத முதல் பிறந்தநாள் இது. இசைத்தட்டில் துவங்கி, ஐ டியூன்ஸ் வரை ஆக்கிரமித்திருக்கும் பாலு இல்லாமல் நம்மால் நாட்களை கடக்க முடியாது. இன்னும் அவர் பாடி வெளிவர காத்திருக்கும் படங்கள் பல! பாலு பாடல்களை மொத்தமாக ஒலிக்கச் செய்தால், அதை கேட்க வாழ்நாள் போதாது. ‛ஒரு பாடல் பாட வந்தவன்… உன் பாடலாகிறேன்… விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக்கூடுமா! நீ கீர்த்தனை… நான் பிரார்த்தனை! பொருந்தாமல் போகுமோ! இதோ இதோ எங்கள் பல்லவி பாலு!


‛சேஸிங்… ரன்னிங்… எஸ்கேப்…’ தனது இன்னும் பல ‛க்ரைம்’ காலங்களை பகிரும் ‛வரிச்சூர்’ செல்வம்!