ஜெயிலர் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு ஒருசில காட்சிகளின் நீளத்தை குறைக்கவும், சில இடங்களில் மியூட் போடவும் உத்தரவிட்டுள்ளது.

  


நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியாவாக உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசை அமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படம் திரைக்கு வருகிறது.  


முன்னதாக தமன்னாவின் அசத்தல் நடத்தில் வெளியான காவலா பாடலும், ரஜினியின் மாஸ் வசனத்தில் வெளியான ஹூக்கும் பாடலும் மாஸ் ஹிட்டாக இணையத்தில் டிரெண்டாகியது. அந்த வரிசையில் நேற்று மாலை ஜெயிலர் படத்தின் 3வது பாடலை படக்குழு வெளியிட்டது. ‘ஜுஜுபி’ என்ற பெயரில் வெளியான 3 நிமிட பாடல் வரிகள் ரஜினியின் அதிரடி ஆக்‌ஷனை காட்டியுள்ளது.


அனிருத் இசையில் சூப்பர் சுப்பு வரிகளை பாடகி தீ தனக்கே உரிய பாணியில் பாடி அசத்தி உள்ளார்.  பாடலில் ”புலிக்கே பசிய தூண்டிப்புட்ட, கரண்டுல கைய வச்சிப்புட்ட, காவு வாங்காம விடுமா” வரிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜுஜுபி பாடலில் அனிருத்தின் மிரட்டல் இசையும், ரஜினியின் மிரட்டல் காட்சிகளும் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 




இந்த நிலையில் ஜெயிலர் படத்தை திரையிட அனுமதி அளித்து தணிக்கை குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது. ஆனால், படத்தில் ரவுடிகள் கொலை செய்யும் போது ஏற்படும் ரத்த காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளன. கார் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொறுப்பு துறப்பு போடவும், கொலை செய்யும் காட்சிகளின் நீளத்தை குறைக்கவும், நான் எஞ்சாய் பண்ணிக்கறேன் என்ற வசனத்தை மியூட் செய்யவும், புகைப்பிடித்தல் காட்சிகளை நெருக்கமாக காட்டுதவதை தவிர்க்கவும் படக்குழுவுக்கு தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

 

ஏற்கெனவே வெளியான  டீசரிலும், ஹூக்கும் மற்றும் ஜுஜுபி பாடல்களிலும் ரத்தமும், சதையுமாகவும், ஆயுதங்களுடன் ரஜினி காணப்பட்டதால் படத்தில் அதிரடி காட்சிகளுக்கு பஞ்சமில்லை. இந்த நிலையில் வன்முறை காட்சிகளின் நீளத்தை குறைக்க தணிக்கைக்குழு உத்தரவிட்டுள்ளது. 

 

இதற்கிடையே நாளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஜெயிலர் படத்துக்கான இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதில், ரஜினி உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்பதால் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.