பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


தள்ளிப்போகும் தங்கலான்?


பா.ரஞ்சித் - விக்ரம் முதன்முறையாகக் கூட்டணி வைத்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரமாண்ட முறையில் தயாராகி உள்ளது. நடிகர் பசுபதி, நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.




18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க வயலில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படியாக கொண்டு பீரியாடிக் ஆக்ஷன் படமாக தங்கலான் உருவாகியுள்ளது. பழங்குடியினத்தின் தலைவராக விக்ரம் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் டீசரில் விக்ரமின் ஆக்ரோஷமான நடிப்பு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்கெனவே உருவாக்கியுள்ளது.


மார்ச் மாத ரிலீஸ்?


மேலும் படத்தினை ஆஸ்கருக்கு கொண்டு செல்ல படக்குழு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக படத்தின் இணை தயாரிப்பாளர் தனஞ்செயன் முன்னதாகத் தெரிவித்தது ரசிகர்களையும் உற்சாகமடையச் செய்தது.


இந்நிலையில், தங்கலான் படத்தின் ரிலீஸ் ஒத்திப்போக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தங்கலான் திரைப்படம் வரும் 2024, குடியரசு தினத்தன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், தற்போது தங்கலான் படப்பிடிப்பு தள்ளிப்போக உள்ளதாகவும், மார்ச் மாதம் புனித வெள்ளி விடுமுறை தினமான மார்ச் 29ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், புனித வெள்ளியைத் தொடர்ந்து 29, 30, 31 ஆகிய விடுமுறை தினங்களைக் குறிவைத்து இப்படம் வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. படத்தின் சில காட்சிகளில் இயக்குநருக்கு திருப்தி இல்லாததால் ரீ ஷூட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


துருவ நட்த்திரம் பிரச்னை




ஏற்கெனவே விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் சென்ற நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில் மற்றுமொரு விக்ரமின் திரைப்படமும் இதேபோல் தள்ளிப்போகும் எனக் கூறப்பட்டுள்ளது விக்ரம் ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


எனினும் இந்தத் தகவலில் உண்மை இல்லை என்றும், திட்டமிட்டபடி படம் வெளியாகும் என தங்கலான் படத்தரப்பு மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மை நிலவரம் என்ன என்பது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரிய வரும்.


நம்பிக்கை தெரிவிக்கும் விக்ரம் ரசிகர்கள்!


இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பிற கதாபாத்திரங்களைத் தாண்டி விக்ரமின் ஆதித்த கரிகாலன் பாத்திரம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. அந்த வரிசையில் வரும் ஆண்டு விக்ரமின் தங்கலான் பாத்திரமும் நல்ல வரவேற்பைப் பெறும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


அடுத்ததாக விக்ரம் சித்தா இயக்குநர் அருண் குமார் உடன் விக்ரம் கைக்கோர்ப்பதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.