இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் படம் 'Thalapathy 67'. இந்த படத்தில் நடிகை விஜய்யுடன் சமந்தா இணைவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த படத்தில் சமந்தா வில்லியாக நடிக்கிறார் என்கிற தகவல் வெளிவந்திருக்கிறது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தில் உள்ளது.அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் Thalapathy 67 சூட்டிங் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் ஆகிய நான்கு படங்களை இயக்கியுள்ளார்.


இந்த நான்கு படங்களும் பிளாக்பஸ்டர் படங்கள் தான். குறிப்பாக பகத் பாசில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுத்த விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்துள்ளது. 


ட்ரெண்ட் செட்டர் லோகேஷ் கனகராஜ் :



முன்னணி ஹீரோக்களை வில்லனாக நடிக்க வைத்து, அந்த படங்களை மெகா ஹிட்டாக்கி புதிய ட்ரெண்டை உருவாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை பவானியாகவும், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியை சந்தானமாகவும், நடிகர் சூர்யாவை ரோலக்ஸ் ஆகவும் நடிக்க வைத்து திரையைத் தீப்பிடிக்க வைத்துவிட்டார். தற்போது லோகேஷின் மாஸ் வில்லன்ஸ் பட்டியலில் மாஸ் வில்லியாக களமிறங்குகிறார் நடிகை சமந்தா. இதுவரை கியூட் ஸ்வீட் கேர்ளாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகை சமந்தா, இந்த படம் மூலம் ராவான ரவுடியாக உருமாற உள்ளார்.


ரவுடித்தனம் சமந்தாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடிகை சமந்தா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஒரு சமந்தா அப்பாவியாகவும், இன்னொரு சமந்தா அடப்பாவியாகவும் வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார். எனவே இந்த கதாபாத்திரம் சமந்தாவிற்கு கடினமாக இருக்காது எனத் தோன்றுகிறது.


மீண்டும் இணைகிறது ஹிட் காம்போ!




நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெறி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை சமந்தா. கோலிவுட் கலக்கல் ஜோடிகளில் இந்த  ஜோடியும் ஒன்று. இவர்கள் இணைந்து நடித்த மூன்று படங்களுமே ஹிட் படங்கள் தான்.


தற்போது விஜய்க்கு வில்லியாக நடிக்கவிருக்கிறார் சமந்தா என தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த செய்தி விஜய் மற்றும் சமந்தா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக மாறியுள்ளது.


தமிழ் சினிமாவில் பெண்கள் காட்சி பொருளாகவே பயன்படுத்தப்படுகின்றனர் என்ற பிம்பம் உடைய ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்லலாம். பெரும்பாலும் கதாநாயகருக்காக கதாநாயகி எனவும், துணை நடிகையாகவும் ஹீரோயின் ரோல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.


அதை சமீப காலங்களில், நடிகை நயன்தாரா தேர்ந்தெடுக்கும் கதாப்பாத்திரங்கள் உடைத்து திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் (women centric) படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுக்க ஆரம்பித்துள்ளது. அதைத் தொடர்ந்து அருவி, ராட்சசி என பல விமன் சென்ட்ரிக் படங்கள் வெளியானது. வில்லன் என்றால் சினிமாவில் ஆண் தான் இருக்கணுமா… என்ற கேள்விக்கு பதில் அளிக்கப் போகிறது லோகேஷ் கனகராஜின் இந்த படம்.