கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் ஆவடி பட்டாலியன் தலைவர் ராதாகிருஷ்ணன், எஸ்.பி. கிங்ஸிலி உள்ளிட்ட 5 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். 


முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நிலையில் போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர். 


144 தடை உத்தரவு


இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று மாலை வன்முறை நடைபெற்ற இடங்களை  உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். இதனிடையே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.


 


திட்டமிட்ட வன்முறை


அப்போது பேசிய நீதிபதி, கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்ட வன்முறை என்றும், இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பினார். மேலும் மாணவர்களின் டி.சி.க்களை எரிக்க யார் உரிமை கொடுத்தது என கேட்ட நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரும் ஏன் போராட்டம் நடத்தினீர்கள் என ஸ்ரீமதியின் பெற்றோரிடம் கேள்வியெழுப்பினர். மேலும் வன்முறை சம்பவம் கட்டுக்குள் வந்தவுடன் வேலை முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என தெரித்த அவர், வன்முறை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 29ம் தேதி போலீஸ் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். வழக்கை தொடர்ந்து நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்து தொடர்பாக சிபிசிஐடிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண