விஜயா ரோகினியை பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். விஜயா மீனாவிடம், ”போய் காபி போட்டு எடுத்துட்டு வா, அங்க தான் பாட்டி பாட்டினு சுத்திக்கிட்டு இருந்த” என சொல்கிறார். ”கடையைத் திறந்துட்டு வந்து போடுறேன் அத்தை” என்கிறார் மீனா. அதற்கு விஜயா “மாலை வாங்க வரிசை கட்டியா நிக்குறாங்க? முதல்ல இங்க இருக்க வேலையை முடி, இவங்க எல்லாம் ஆபிஸ் போகனும் இல்ல” என்கிறார்.


அண்ணாமலை புதிதாக ஒரு அறை கட்ட வேண்டும் என சொல்கிறார். ”அச்சச்சோ புதுசா வீடு கட்டினா இவங்கள இங்க இருந்து அனுப்ப முடியாதே” என மனதிற்குள் நினைக்கின்றார் விஜயா. பின் “அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என விஜயா சொல்கிறார். பார்வதி, விஜயா வீட்டிற்கு வருகிறார். “ஏன் இன்னும் பூக்கடையை திறக்கல?” என பார்வதி கேட்கிறார். இதைக்கேட்டு விஜயா கடுப்பாகிறார்.


விஜயா பார்வதியை கூட்டிக்கொண்டு ஏதோ பேச வேண்டும் என ரூமுக்கு அழைத்துச் செல்கிறார். ஸ்ருதி கதவை மூடிக்கொள்கிறார். மனோஜ் ரூமுக்கு செல்கிறார். மனோஜ் வேலை தேடாமல் பெட் மீது படுத்துக் கொண்டு “சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ணவா? போலாமா?” எனக் கேட்கிறார். இதனால் கோபமாகும் ரோகினி மனோஜிடம் சண்டை போடுகிறார். இதை விஜயா கேட்டு விடுகிறார். இதனால் அங்கேயும் பேச முடியவில்லை. முத்து ரூமுக்குச் சென்றால் அவரும் நீங்கள் ஹாலில் சென்று பேசுங்கள் என சொல்லி விடுகிறார். இதனால் விஜயா கடுப்பாகி விடுகிறார். 


விஜயா பார்வதியிடம் இந்த முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மீனா வந்து விடுகிறார். பின்னர் விஜயா, “ரோகினியின் அப்பா மனோஜூக்கு பிஸ்னஸ் வச்சிக்கொடுத்ததும் என் வீட்டுல இன்னும் 2 ஃப்ளோர் கட்டிடுவேன்” எனக் கூறுகிறார். இதனையடுத்து ரோகினியும் அவரின் தோழி வித்யாவும் சந்திக்கின்றனர். “நீ நடிக்குறதுக்குனு அனுப்புன ஆளாலயே நான் பலதடவை மாட்டி இருப்பேன்” என சொல்கிறார். 


 “இதை ரொம்ப நாள் மறச்சிக்கிட்டே இருக்க முடியாதுடி, டைம் பார்த்து எல்லாத்தையும் மனோஜ் கிட்ட சொல்லிடு” என வித்யா சொல்லுகிறார். ”உண்மை தெரிஞ்சா எங்க மாமியார் என்னை மீனாவ விட மோசமா நடத்துவாங்க” என ரோகினி சொல்லுகிறார். ப்ரெளன் மணி வித்யா வீட்டிற்கு கறி எடுத்துக்கொண்டு செல்கிறார். வித்யா ப்ரெளன் மணியிடம், “ஏன் அங்க போய் குடிச்ச?” என சண்டைப் போடுகிறார். 


”படத்துல நடிக்குற வரைக்கும் நீ கொஞ்சம் யாரு கண்ணுலையும் படாமதான் போகணும்” என்கிறார் வித்யா. ப்ரெளன் மணியும் அதற்கு ஒத்துக் கொள்கிறார். ரோகினி வேலை செய்யும் பார்லரின் ஓனர் முத்துவின் காரில் பார்லருக்கு செல்கிறார். அவர் காரில் இருந்து போன் பேசிக்கொண்டே காசு கொடுகாமல் ரோகினி இருக்கும் பார்லருக்குள் சென்று விடுகிறார். முத்து பார்லருக்குள் செல்ல இறங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.