சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் மலர்க்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரிதிகா. அதற்கு முன்னரே அவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் 'நாதஸ்வரம்' சீரியல் மூலம் அவருக்கு கிடைத்த பிரபலம் பன்மடங்கு பெருகியது. ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையிலும் முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அதன் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


 




சீரியலில் மட்டுமல்லாமல் வெண்ணிலா கபடிக் குழு, வேங்கை உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் ஸ்ரிதிகா நடித்துள்ளார். 2019ஆம் ஆண்டு சனீஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.


சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'மகராசி' சீரியலில் நடித்து வந்த  ஸ்ரிதிகா அதில் தன்னுடைய சக  நடிகரான ஆர்யனை தற்போது காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற அதிகாரபூர்வமான தகவலை தெரிவித்துள்ளார்.


பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனான எஸ்.எஸ்.ஆர் ஆர்யன் மகராசி சீரியலில் லீட் ரோலில் நடித்திருந்தார். அவருக்கு ஏற்கனவே சின்னத்திரையை நடிகையான நிவேதிதா பங்கஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமும் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது.


 



 


ஆர்யன் மற்றும் ஸ்ரீதிகா இருவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள் என்றாலும் அதில் இருந்து மீண்டு வந்து அவர்கள் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறி தற்போது பெற்றோரின் ஆசீர்வாதத்துடனும் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  அதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  


"கடந்த கால வாழ்க்கையில் இருந்து எந்த விதமான எதிர்மறையையும் பரப்ப விரும்பவில்லை. தூய நட்பும் புரிந்து கொள்ளும் உணர்வும் நம்மை அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு எடுத்து செல்லும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. உங்கள் அனைவரின் அனைவரின் அன்பும் ஆதரவுடனும் எங்கள் இருவீட்டாரின் சம்மதத்தோடு இந்த பதிவு திருமணத்தை தேர்ந்து எடுத்து கொண்டோம்.


 






இன்ஸ்டாகிராம் பயோவில் என்னுடைய பெயர் ஸ்ரிதிகா சனீஷ் என்ற பெயரை சில கோளாறுகளால் மாற்றமுடியாமல் போனது. ஆனால் அதை விரைவில் சரி செய்ய முயற்சிக்கிறோம், உறுதி அளிக்கிறோம். மீண்டும் உங்கள் அனைவரும் எங்களது நன்றிகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.