கயல் தொடரில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகை அபிநவ்யாவுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


சன் டிவியில் ஒளிப்பரப்பான  'பிரியமானவள்' தொடரில் ஸ்வாதி என்ற கேரக்டரிலும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் அபிநவ்யா. செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்த அபிநவ்யா, கயல் சீரியலில் ஆனந்தி ரோலில் நடித்து வருகிறார். இவர் பூமி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகர் தீபக்குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.






கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில், நவீன் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற தீபக் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, தற்போது ஈரமான ரோஜாவே -2 ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். திருமணம் முடிந்து இருவரும், தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வந்தனர். அபிநவ்யா கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். 






மேலும் தனது கணவர் தீபக்குடன் சேர்ந்து அவர் எடுத்த மெட்டர்னிட்டி (கர்ப்பகால) ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் அபிநவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.


குழந்தையின்  புகைப்படத்தோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், அதில் கடவுள் நம்மீது பொழிந்த கருணையின் விளைவாக விலைமதிப்பற்ற ஒரு பரிசு கிடைத்துள்ளது.  செவிலியர் குழந்தையை என் கைகளில் வைத்தபோது, ​​நான் உயிரோடும் உற்சாகத்தோடும் உணர்ந்தேன்.உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் பிரார்த்தனையும் தேவை என தெரிவித்துள்ளார்.