ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சீரியல் 'சீதா ராமன்'. மாமியார் - மருமகளுக்கு இடையே நடக்கும் கதைக்களம் என்பதால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.


ஹீரோவாக ஜே டிசோசா நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியங்கா நல்காரி நடித்து வந்தார். இந்த நிலையில் சீதாவாக நடித்த பிரியங்கா நல்காரி சீரியலில் இருந்து விலகுவதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார் எனும் எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தன.


 



பிரியங்கா நல்காரி - ஜே டிசோசா


சன் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. சிபு சூரியன் ஜோடியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த சீரியல் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சிபு சூரியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாரதி கண்ணம்மா 2' சீரியலில் நடித்து வருகிறார். பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சீதா ராமன்' நிகழ்ச்சியில் இணைந்தார். 


சீதா ராமன் சீரியலும் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. ரோஜா என்ற அடையாளம் சீதாவாக மாறி பிரியங்கா நல்காரியை மக்கள் வரவேற்றனர். திடீரென ஒரு நாள் பிரியங்கா தனது காதலரை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில்  வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்தார். அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.


பின்னர் மலேசியா கோயிலில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அவர் மலேசியாவில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்து சென்றார். அதனால் பிரியங்காவின் கணவருக்கு அதில் உடன்பாடு இல்லாததால் நடிப்பதில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார். அவரின் இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 



அந்த வகையில் பிரியங்கா நல்காரி நடித்து வந்த கதாபாத்திரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'செந்தூரப்பூவே' சீரியல் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில எபிசோட்களில் மட்டுமே பிரியங்கா நல்காரி நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. ஸ்ரீநிதி எந்த அளவிற்கு சீதாவாக பொருந்துவார் அவரை ரசிகர்கள் எப்படி ஏற்று கொள்ளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.