பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி  தனக்கு விவாகரத்து எதனால் ஏற்பட்டது என்பதை முதல்முறையாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். 


சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களான சந்திரலேகா, வம்சம் ஆகியவை மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை சந்தியா ஜாகர்லமுடி. இவர் தற்போது யூட்யூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் சந்தியாவிடம், “உங்களுக்கென்று கணவர், குழந்தைகள்ன்னு எதிர்காலம் வேண்டாமா என வீட்டில் கேட்கமாட்டார்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு, ‘எங்க வீட்டுல அதெல்லாம் கேட்கமாட்டார்கள். திருமணம் தான் ஒருவரின் எதிர்காலமா?. நான் ஒருவேளை கல்யாணம் செய்தாலும் குழந்தைகள் வேண்டாம் என தெளிவாக இருக்கிறேன். அதற்கு காரணம் மக்கள் தொகை இவ்வளவு இருக்கும் போது என்னுடைய பங்களிப்பு தேவையில்லை என நினைக்கிறேன். ஒருவேளை தேவைப்பட்டால் நான் தத்தெடுத்துக் கொள்கிறேன்.


விவாகரத்து செய்ய காரணம் 


நான் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தேன். இந்த 11 ஆண்டுகளில் இப்படியான எண்ணத்துடன் கூடிய ஒருவரை சந்திக்கவே இல்லை. இப்படி பேசுபவர்களை பெண்ணியவாதி என சொல்வார்கள். பெண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் உள்ளது. 


என்னுடைய முந்தைய திருமண  வாழ்க்கை குறித்து எங்கேயும் பேசியது இல்லை. நானும் முன்னாள் கணவரும் காரில் சென்று கொண்டிருக்கிறோம். ஒரு இடத்தில் விபத்து நடக்கிறது. ஒரு அப்பாவும், குழந்தையும் பைக்கில் இருந்து கீழே விழுந்து கிடந்தார்கள். என்னோட கார் நின்றதும், நான் என் கணவரிடம் எதுவும் கேட்காமல் வேகமாக ஓடிச்சென்று குழந்தையை தூக்கி எதுவும் அடிபட்டுள்ளதா என விசாரித்து கொண்டு திரும்பி பார்த்தால் என்னுடைய கணவரையும், காரையும் காணவில்லை. அவருக்கு கோபம் வந்துடுச்சி போல ரொம்ப தூரத்துல போய் காரை நிப்பாட்டி இருக்காரு. 


நான் கொஞ்ச தூரம் நடந்து சென்று கணவரிடம் ஏன் இங்கே வந்து காரை நிப்பாட்டிருக்கீங்க என கேட்டேன். அதற்கு அவர், ‘நீ என்ன அந்த ஆளோட பொண்டாட்டியா?.. சுத்தி 100 பேர் இருக்கும்போது நீ மட்டும் போய் எதுக்கு உதவி பண்ற? என கேட்டார். இதை கேட்குறப்ப உங்க மனநிலை எப்படி இருக்கும்?நான் பெண்ணியம் இருக்கும் கணவரை தான் எதிர்பார்க்கிறேன். இது ஒரு சாம்பிள் தான். நான் அவரை குறை சொல்லவில்லை. அவரின் மனநிலை அதுதான். அது எனக்கு சரிவரவில்லை அவ்வளவு தான். 


தாராளமாக வெளியே வாருங்கள்


நீங்க காதலிச்சி ஜெயித்தாலும், தோற்றாலும் பசங்க, பொண்ணுங்க யாராக இருந்தாலும் உடைஞ்சி போயிடாதீங்க. நியாயமான பக்கம் இருங்கள். ஆனால் இப்போதைய இளைஞர்களின் மனநிலை தெளிவாக உள்ளது. எப்போதும் உறுதியாக இருங்கள். கல்யாணம் உங்கள் வாழ்க்கையின் எல்லை இல்லை. அது முடியாமல் போகும்போது தாராளமாக வெளியே வாருங்கள். அதற்கு தான் விவாகரத்து என்ற ஒன்று உள்ளது. கல்யாணம் என்பது புனிதமானதுதான். ஆனால் அதை 2 பேரும்  மதிக்க வேண்டும். தனியாக ஒன்சைட் ஆக எப்போதும் தொங்கி கொண்டே இருக்காதீர்கள்.