நன்கு படித்து, மேலாண்மை பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதன்மையாக பட்டம்பெறும் ஜனனி, மதுரையில் இருக்கும் ஒரு பிற்போக்கான குடும்பத்துக்கு, மருமகளாக வந்து படும் அவஸ்தைகளும், தடைகளை தகர்த்து அவளால் முன்னேற முடிகிறதா அல்லது உறவை முறித்துக்கொண்டு சுய முன்னேற்றத்துக்காக உழைக்கிறாளா என்பதுதான் எதிர்நீச்சலின் கதை..


ஜனனிக்கு கணவனாக சக்தியும் (சபரி பிரஷாந்த்), சக்தியின் அண்ணன்களாக ஆதி குணசேகரன் (மாரிமுத்து), கதிர் (விபு ராமன்), ஞானம் (கமலேஷ்) ஆகியோரும், மருமகள்கள் ஈஸ்வரி (ஃபைவ்ஸ்டார் கனிகா), ரேணுகா (ப்ரியதர்ஷினி), நந்தினி(ஹரிப்ரியா) ஆகியோரும் சேர்ந்து எதிர்நீச்சல் கதையை இன்னும் விறுவிறுப்பாக்குகிறார்கள்.


எபிசோட் 169-இல், ஏற்கெனவே இருக்கும் பிரச்சனை போதாதென்று, வீட்டுக்கு வரும் ஜனனியின் அப்பா நாச்சியப்பன், ”என் பொண்ணு வாழ்க்கைக்கு பதிலைச் சொல்லுங்க” என வாண்டடாக வண்டியில் ஏறுகிறார். நியாயம், நீதி என்னும் வார்த்தைகளுக்கு அர்த்தம் அறியாத ஆதி குணசேகரனும், அவரது தம்பிகளும் நாச்சியப்பனை அடித்து, கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிவிடுகிறார்கள். பலரும் அறிவுரை சொல்லிக் கேட்காமல் ’தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என முடிவெடுத்த தனது அவசரத்தை நினைத்து நினைத்து அழுது தீர்க்கிறார் நாச்சியப்பன். “இனிமே இந்த வீட்டுல நீ வாழவேண்டாம்டா, வீட்டுக்கு வந்து மேற்கொண்டு படிடா, வேலைக்கு போடா” என்று நியூ ஏஜ் அப்பனாக பேசுகிறார். (நல்லவேளையாக, திரும்ப இன்னொரு கல்யாணம் என்று நாச்சியப்பன் பேசவில்லை. பேசியிருந்தால் குதறி வைத்திருப்போம்)


”நான் வேலை பற்றிய சிந்தனையில் இல்லை. சக்தியின் உடல்நிலையையும், மனநிலையையும் சரிசெய்து, அவருடன் நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்ளத்தான் போகிறேன். எல்லாமே சரியாகிவிடும்” (குடும்ப பெண்களின் யுனிவர்சல் டயலாக்) என்று சொல்லி, அப்பாவை சென்னைக்குப் போகுமாறு வலியுறுத்துகிறாள் ஜனனி. என்னால்தான் எல்லா பிரச்சனைகளும் என்று கதறியழும் தர்ஷினியை தேற்றுகிறார்கள் ரேணுகாவும், நந்தினியும்.



நான் போய் ஜனனி சித்திக்காக பேசப்போறேன் என்று கிளம்பிப்போய் பேசும் தர்ஷினியை, கண்ணாலேயே எரிப்பதுபோல் பார்க்கிறான் சக்தி. யாரும் ஜனனிக்காக வக்காளத்து வாங்கத்தேவையில்லை என்கிறான். 


எபிசோட் 170-இல், ஜனனியிடம் கெளதமைப் பார்த்ததாக சொல்கிறார் நாச்சியப்பன். ஜனனியை மருத்துவமனையில் சேர்த்ததும் கெளதம்தான் என சொல்கிறார். அந்த தொலைபேசி உரையாடலைக் கேட்ட சக்தி, "உனக்கு ஒன்னும் தெரியாம இல்ல. வீடு விட்டா காலேஜுன்னு இருப்பன்னு சொன்னதெல்லாம் சும்மா. இப்போ எங்க இருந்து உன் ஃப்ரெண்ட் முளைச்சு வந்தான்” என சந்தேகக் கேள்வி கேட்கிறான் (ஏற்கெனவே பழக்கமெல்லாம் லட்சணம்.. இதில் சந்தேகம் வேறு) ஜனனி, இந்த நரக வாழ்க்கையில் இருந்து வெளியேறப்போகிறாளா? இல்லையெனில் இனியும் சமாளித்து சக்தியை திருத்துவாளா? (ஏனெனில் ஆணாதிக்கத்தை உடல் முழுக்க வைத்திருக்கும் ஆண்களை திருத்திக்கொண்டு இருப்பதற்காக பெண்கள் படைக்கப்படவில்லை. அப்படித்தானே?)


இன்னொரு பக்கம், ஈஸ்வரியின் நிலத்தை திருப்பிக்கொடுக்க ஒப்புக்கொள்கிறார் எஸ்.கே.ஆர். அதற்குப் பதிலாக வேறு ஒரு பிசினஸில் குறுக்கில் வந்து லந்து கொடுப்பதை நிறுத்திக்கொள்ள குணசேகரனை சம்மதிக்க வைக்கவேண்டும் என செக் வைக்கிறார். அதற்கான பிரதிநிதியாக ஆதி குணசேகரனை சந்திக்கப்போவது யார் தெரியுமா? கெளதம்தான்..