சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் மற்ற தொடர்களை காட்டிலும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கிறது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இந்த தொடரில்   நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. கடந்த சில வாரங்களாக ஆதிரையின் திருமணத்தை வைத்து மிகவும் விறுவிறுப்பாக கதைக்களத்தை நகர்த்திய இயக்குநர் தற்போது 40 % ஷேருக்கான குணசேகரனின் சூழ்ச்சி, கேள்விக்குறியாக இருக்கும் ஆதிரை திருமண வாழ்க்கை, சூழ்ச்சியை முறியடிக்க முயற்சிக்கும் ஜனனியின் அடுத்த கட்ட திட்டம், ஜீவானந்தம் டைரக்ட் என்ட்ரி இப்படி பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட உள்ளதால் மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது எதிர் நீச்சல் தொடர். 



அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ஆதிரை மற்றும் கரிகாலனை மாப்பிள்ளை விருந்துக்காக குணசேகரன் வீட்டுக்கு அழைக்க, வரமுடியாது என ஆதிரை சொல்கிறாள். ஜனனி அருணுக்கு ஏற்பட்ட விபத்து குறித்தும் அவனின் தற்போதைய நிலை குறித்தும் அதனால்தான் அவனால் வரமுடியாத சூழல் ஏற்பட்டது குறித்தும் விளக்கமாக ஆதிரையிடம் சொல்ல, அதற்கு பிறகு தான் உண்மை அறிந்து தனது தலைவிதியை நினைத்து அழுது துடிக்கிறாள் ஆதிரை.


அவளும் வீட்டுக்கு வர சம்மதித்ததால் ஆதிரை, கரிகாலன் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள் சக்தி, ஜனனி மற்றும் நந்தினி. 


ஆதிரை வேகவேகமாக வீட்டுக்குள் ஓடி வர அவளை தடுத்த குணசேகரன், "கரிகாலனுடன் போய் நில்லு... ஆரத்தி எடுக்க வேண்டும்" என உள்ளே நுழையும் அனைவரையும் தடுக்கிறார். "ஆரத்தி தட்டை ரெடி செய்ய சொல்லி இருந்தேன் இல்லையா?" என ரேணுகாவை மிரட்ட, ஜனனி "நீங்க எடுக்க வேண்டியதுதானே" என கேட்கிறாள். "முறை என ஒன்று இருக்கு. மாப்பிள்ளையாக முதல்முறையாக கரிகாலன் வீட்டுக்கு  வருகிறான். அவனை ஆரத்தி எடுத்து தான் வரவேற்க வேண்டும் அதுதான் முறை" என சொல்கிறார் குணசேகரன். கடுப்பான நந்தினி "எல்லாவற்றையும் முறையாக தான் செய்தீர்களா? முறையை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்" என சரியான பதிலடி கொடுக்கிறாள். 



ரேணுகா - ஞானம் தம்பதியின் மகள் பள்ளியிலிருந்து அழுது கொண்டே வருகிறாள். அவளை சுற்றி வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் உட்கார்ந்து சமாதானம் செய்கிறார்கள். "வீட்டிலிருக்கும் பொம்பள குழந்தைக்கு என்ன சொல்லி கொடுக்கணும், என்று கூட உங்களுக்கு தெரியவில்லை" என அனைவரையும் பார்த்து கேட்கிறார் குணசேகரன்.


 


 



அதற்கு அந்த சின்ன பொண்ணு " எனக்கு யாரும் கத்து கொடுக்கல. மத்தவங்கள எப்படி நடத்தக்கூடாதுன்னு நான் உங்களைப் பார்த்துதான் கத்துக்கிட்டேன் பெரியப்பா” என முகத்தில் ஓங்கி அடித்ததுபோல கூறினாள். எடுத்து எறிந்தார்போல மகள் பேசிய உடன்  குணசேகரன் முகத்தில் அத்தனை அவமானம் தெரிகிறது. வீட்டில் இருக்கும் குழந்தை கூட அவரின் நடவடிக்கைகளை பார்த்து அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டது. இந்த லட்சணத்தில் இருக்கிறது குணசேகரனின் நடவடிக்கை என எதிர் நீச்சல் தொடரின் தீவிர ரசிகர்கள் தலையில் அடித்து  கொள்கிறார்கள். இதுதான் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் எதிர்நீச்சல் எபிசோட் ப்ரோமோ.