சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் நடந்த உண்மை சம்பவம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பொதுவாக சினிமாவில் சண்டை காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நிஜமாகவே உயரத்தில் இருந்து குதிப்பவர்களும், ரிஸ்க் எடுத்து சண்டை போடுபவர்களும், ஆபத்தான பாதையில் வாகனம் இயக்கும் பிரபலங்களை பற்றி கேள்விப் பட்டிருப்போம். ஆனால் சமீபகாலமாக சின்னத்திரை சீரியல்களில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கான காட்சிகள் இடம் பெறுகிறது. காதல் காட்சிகள் தொடங்கி சண்டை காட்சிகள் வரை இடம் பெறாமல் எந்த சீரியலும் இருப்பதில்லை. இப்படியான நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல சீரியலில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 


இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பதால் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல நிலையில் உள்ளது. வானத்தைப் போல சீரியலில் ஸ்ரீ, சாந்தினி, மகாநதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோடில் ஹீரோ ஸ்ரீ மீது இன்னொருவர் காரி உமிழ்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. கதைப்படி மகாநதி ஷங்கர் தான் அந்த காட்சியில் நடிக்க வேண்டும். ஆனால் தன்னால் சக நடிகர் மீது எச்சில் துப்பி நடிக்க முடியாது என மறுக்கவே, சீரியல் குழுவினர் சோப்புநுரையை பயன்படுத்தி காட்சியை எடுத்து விட முடிவு செய்தனர். 


ஆனால் இதனை ஹீரோ ஸ்ரீ ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜமாகவே எச்சில் துப்பும் காட்சி இருக்க வேண்டும். நான் நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரே சக நடிகை சாந்தினியிடம் விஷயத்தை சொல்ல, முதலில் மறுத்த அவர், ஸ்ரீயின் விளக்கத்தால் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் திரையில் ஒளிபரப்பாகும் போது சக நடிகர் துப்பியது போன்று இடம் பெற்றிருந்தது.


இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் ஸ்ரீ, ‘இதில் ஒன்றும் தப்பில்லை. சீரியலில் நான் நடிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டது. நான் இந்த தொழிலில் காட்டும் உண்மையான அக்கறை தான் ஃபீல்டுல இருக்க காரணம் என நம்புறேன். காட்சிகள் யதார்த்தமா வரணும்ன்னா அதற்கேற்ற உழைப்பை கொடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.