பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா நடவடிக்கைகளால் கோபி அப்செட் ஆகும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். மேலும் தன்னை அவமானப்படுத்திய பாக்யா மற்றும் குடும்பத்தினரின் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என சபதம் எடுக்கிறார். 


அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இந்த விஷயம் பாக்யா குடும்பத்தாருக்கு தெரிந்து அவர்கள் கோபி மீது கொலைவெறியுடன் உள்ளனர். இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


பிரியாணி ஆசையால் நேர்ந்த சோகம் 


கோபி மற்றும் மயூ ஆகியோர் வீட்டில் பசியுடன் அமர்ந்திருக்கும் நிலையில் பிரியாணி வாசனை வருகிறது. ராதிகா பிரியாணி சமைக்கிறார் என கோபி நினைக்கும் நிலையில், அந்த வாசனை எதிரே இருக்கும் பாக்யா வீட்டில் இருந்து வருகிறது. கல்யாண ஆர்டரில் பணம் வந்ததால் பாக்யா அனைவருக்கும் ட்ரீட் கொடுக்கிறார்.ஆனால் பிரியாணி ஆசையுடன் சாப்பிட செல்லும் கோபிக்கு அதற்கு பதிலாக ராதிகா ஓட்ஸ் பரிமாறுகிறார்.இதனால் அதிர்ச்சியடையும் கோபி அவரை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் வேறு வழியின்றி அதனை சாப்பிட்டு அல்லல்படுகிறார். 


அதன்பின்னர் மயூவும் ராதிகாவும் கட்டிலில் படுத்து தூங்க தனக்கும் இடம் கொடுக்குமாறு கோபி கெஞ்சுகிறார். ஆனால் டிஸ்டர்ப் பண்ணாம இருங்க என ராதிகா டென்ஷனாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கோபி தரையில் படுத்து தூங்குகிறார். 


அப்பா - மகன் போட்டி 


மறுநாள் காலையில் செழியன் நடைபயிற்சி முடிந்து வந்ததும் ஈஸ்வரி அவரிடம் கோபி பார்த்தாயா என கேட்க இல்லை என சொல்கிறார். பின்னர் எழிலை செழியன் நடைபயிற்சி  செல்லுமாறு சொல்லுகிறார். வெளியே செல்லும் எழிலுக்கும் கோபிக்கும் இடையே ஓட்டப்போட்டி நடக்க எழில் ஜெயிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கோபியிடம் இனிமேல் நீங்க தோத்துட்டே தான் இருக்கப் போறீங்க என சொல்லிவிட்டு செல்கிறார். 


வீட்டுக்கு திரும்பும் கோபி பழக்க தோஷத்தில் ராதிகாவை பாக்யா என நினைத்து காபி கேட்கிறார். உடனே சுதாரிக்கும் அவர் பேச்சை நல்லவேளையாக ராதிகா கேட்கவில்லை. தொடர்ந்து காபி வேண்டும் என கேட்க ராதிகா முறைப்பதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.