விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான 'பாக்கியலட்சுமி' சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இரவு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாவதால் பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் இந்த தொடர் வெகுவாக கவர்ந்துள்ளது. 


பாக்கியலட்சுமி தொடரின் லீட் ரோலான கோபி என்ற கேரக்டரில் நடிப்பவர் நடிகர் சதீஷ் குமார். இந்த தொடரை சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாட மிக முக்கியமான காரணம் இந்த கோபி கதாபாத்திரம் தான். அவர் செய்யும் அட்ராசிட்டியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் இந்த தொடரை தவறாமல் திங்கள் முதல் சனி வரை கண்டுகளிக்கிறார்கள். சதீஷ் என்ற அவரின் ஒரிஜினல் பெயரே மறந்து போய் கோபி என்ற அடையாளப்படுத்தப்படுகிறார்.  பல ஆண்டுகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் சதீஷுக்கு இந்த சீரியல் தான் மிகப்பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்துள்ளது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவருக்கு ஏராளமான பேன் பாலோவர்ஸ் உள்ளனர். 


 




இன்றும் உடலை கட்டுக்கோப்பாக மெயின்டைன் செய்து வரும் சதீஷ் தினமும் காலை இன்ஸ்டாகிராம் மூலம் பல தத்துவங்களை நல்ல சிந்தனைகளை வழங்கி வருவார். சில சமயங்களில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பதால் அவருக்கு வரும் படு மோசமான கமெண்ட்களை பற்றி எல்லாம் பகிர்வார். காசுக்காக அவர்கள் சொல்வதை நடிக்கிறேன். இதற்காக என்னை வார்த்தையால் காயப்படுத்துவது போல பேசுவது சரியா? என மிகவும் பாவமாக எல்லாம் வீடியோ போடுவார். 


அந்த வகையில் தற்போது அவர் பெரிய சிக்கல் ஒன்றில் மாட்டிக் கொண்டுள்ளார். அது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் புகாரில் தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு...


கடந்த ஆண்டு கலாசேத்ரா காலனியில் உள்ள அருள்மிகு ஆறுபடை முருகன் கோயிலில் நான் சுவாமி தரிசனம் செய்து சென்ற சமயத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து என்னுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என கூறினார். அதை நான் மறுத்ததால் சில நாட்களுக்கு பிறகு செல்போனில் தொடர்பு கொண்டு செல்ஃபி எடுக்க வேண்டும் என தொந்தரவு செய்தார். அதனால் கடுப்பாகி அந்த பெண்ணுடைய நம்பரை பிளாக் செய்துவிட்டேன். 


அதை தொடர்ந்து மீண்டும் அந்த பெண் அடையாரில் உள்ள என்னுடைய வீட்டுக்கு வந்து குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தை வீட்டில் வைத்து விட்டு செய்வினை செய்து விடுவேன் என மிரட்டினார் என புகாரில் தெரிவித்துள்ளார். அதனால் பதறிப்போன சதிஷ் அந்த பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


ஒரு சிலர் இது வெறும் பொழுதுபோக்குக்கான சீரியல் மட்டுமே என்பதை புரிந்து கொண்டு நடிகர்களை பாராட்டுகிறார்கள். ஆனால் ஒரு சிலரோ சீரியலில் பார்ப்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் என்பதை கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த கேரக்டரில் நடிப்பவர்களை திட்டி தீர்த்து வருகிறார்கள். அப்படி ரசிகர்களின் பலதரப்பட்ட விமர்சனங்களையும் பெரும் நடிகர்களில் ஒருவர் தான் சதீஷ்.